எபோலா பாதிப்புடன் டெல்லி விமான நிலையம் வந்த நபர்களுக்கு தீவிர கண்காணிப்பு
டெல்லி: கானா நாட்டில் இருந்து விமானம் மூலமாக டெல்லி வந்த 3 விமான பயணிகளிடம் எபோலோ வைரஸ் பரவலுக்கான அறிகுறிகள் இருப்பதால் அவர்கள் தீவிர பரிசோதனையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவரும் உயிர்க்கொல்லி நோயான எபோலோ ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவக்கூடியது. எனவே ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் ஏர்போர்ட்டில் கடுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர், கானாவில் இருந்து ஜூலை 21ம்தேதி டெல்லிக்கு விமானத்தில் வந்ததாகவும், அவர்கள் மூவருமே தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த குடும்பத்தை சேர்ந்த ஆணுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால், அவரும், அவரது குடும்பத்தாரும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் பெயர் விவரத்தை சுகாதாரத்துறையினர் வெளியிடமறுத்துவிட்டனர். இவர்கள் மூவருமே துவாரகா பகுதியிலுள்ள தங்களது சொந்த வீட்டில்தான் உள்ளனர். இருப்பினும் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல விமானத்தில் வந்த சக பயணிகளிடமும் பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்களுக்கு எந்த விதமான அறிகுறியும் தென்படவில்லை என்பதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே எபோலா பாதிப்புக்குள்ளாகியவர்கள் இந்தியாவுக்குள் வந்துவிட கூடாது என்ற நோக்கத்தில் நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் தீவிர மருத்து பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக மேற்கு கடற்கரை நகரங்களின் விமான நிலையங்களில் தீவிர பரிசோதனைகள் நடந்து வருகின்றன. மங்களூர், மும்பை, கேரளாவிலுள்ள விமான நிலையங்களில் மருத்துவ குழு இரவு பகலாக பயணிகளிடம் பரிசோதனை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications