பிப். 13-ந் தேதி ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்! பிப். 16-ல் வாக்கு வாக்கு எண்ணிக்கை!!
டெல்லி: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 13-ந் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்துள்ளார். இந்த வாக்குகள் பிப்ரவரி 16-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டசபை உறுப்பினர் பதவி பறிபோனது. அவர் மொத்தம் 10 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வென்ற ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் டெல்லியில் இன்று டெல்லி சட்டசபைக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் இன்று அறிவித்தார். டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 7-ந் தேதி தேர்தல் நடைபெறும். பிப்ரவரி 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மேலும் காலியாக இருக்கும் தமிழகத்தின் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் தலைமைத் தேர்தல் ஆணையாளர் வி.எஸ் சம்பத் அறிவித்தார்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் 16-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் அட்டவணை விவரம்:
வேட்புமனு தாக்கல் ஜன. 19ந் தேதி தொடக்கம்;
வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஜனவரி 27-ந் தேதி கடைசி நாள்
வேட்புமனு பரிசீலனை நாள் - ஜனவரி 28;
வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - ஜனவரி 30
வாக்குப் பதிவு பிப்ரவரி 13ந் தேதி நடைபெறும்;
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 16-ந் தேதி தேதி நடைபெறும் .












Click it and Unblock the Notifications