இரட்டை இலைக்கு லஞ்சம் - டெல்லி போலீஸ் கிடுக்கிப்பிடி கேள்வி... திணறும் டிடிவி தினகரன்
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பாக நேரில் ஆஜராகியுள்ள டிடிவி தினகரனிடம் டெல்லி போலீசார் கிடுக்கிப் பிடி கேள்விகளை கேட்டு திணறடித்து வருகின்றனர்.
டெல்லி : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பெற ரூ.50 கோடி பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ் முன்பு டிடிவி தினகரன் நேரில் ஆஜரானார். அவரை ரகசிய அறையில் வைத்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை கைது செய்வது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளும் கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரின. அடுத்து இரட்டை இலை சின்னம், கட்சி பெயரை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. இரு தரப்பினரும் தங்கள் வசம் உள்ள ஆவணங்களை சமர்பிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர், அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினர். இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக, ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதில் முன் பணமாக ரூ.1.30 கோடியை டிடிவி தினகரன் கொடுத்ததாகவும் சுகேஷ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சுகேஷ் சந்திரசேகரை 8 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுகேஷ் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் டிடிவி தினகரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு போலீசார் சம்மன் அளித்தனர்,
ரகசிய அறையில் விசாரணை
இதனையடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் முன்பு ஆஜரானார். சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலம் மற்றும் டிடிவி தினகரனிடம் கேட்கப்பட வேண்டிய பல்வேறு கேள்விகளை டெல்லி போலீசார் தயார் நிலையில் வைத்திருந்தனர். அவற்றுடன் செல்போன் உரையாடல் ஆதாரங்களின் அடிப்படையில் ரகசிய அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடுக்கிப் பிடி கேள்வி
சுகேஷ் சந்திரா உடனான தொடர்பு, இரட்டை இலை பெற ரூ.1 கோடியே 30 லட்சம் லஞ்சம் கொடுத்தீர்களா? வேறு எந்த மாதிரியான பண பரிமாற்றம் நடைபெற்றது என்ற கேள்விகள் கேட்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கேள்விகளைக் கேட்டு டிடிவி தினகரன் பதில் சொல்ல முடியாமல் திணறியதாகவும் கூறப்படுகிறது.
கைதாக வாய்ப்பு
விசாரணையின்போது வக்கீல்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த விசாரணைக்குப் பிறகு தினகரன் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications