தமிழக சட்டசபைத் தேர்தல்.. தேதி இன்னும் முடிவாகவில்லை.. தேர்தல் ஆணையம்
டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளது. இருப்பினும் இன்னும் தேதியை அது முடிவு செய்யவில்லை.
தமிழக சட்டசபையின் ஆயுள் காலம் வருகிற மே 22ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆயுள் முடிய சரியாக இன்னும் 4 மாதங்கள் உள்ளன. இந்த நிலையில் தேர்தல் நடத்துவது தொடர்பான ஏற்படுகள் சூடு பிடித்துள்ளன. மாநில அளவிலும், டெல்லி அளவிலும் தேர்தல் ஆணையம் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் ஏற்கனவே தொடங்க விட்டன. நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளது.

5 மாநில தேர்தல்
தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மற்ற இரு ஆணையர்களான ஏ.கே.ஜோதி, ஓம்பிரகாஷ் ராவத், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மற்றும் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு- ஏற்பாடு
இந்தக் கூட்டத்தில் ஐந்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தலை எப்படி அமைதியாக நடத்துவது, நேர்மையாக, சுதந்திரமாக எப்படி நடத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தேதியை முடிவு செய்யவில்லை
கூட்டத்திற்குப் பின்னர் தேர்தல் ஆணையர் ராவத் செய்தியாளர்களிடம் பேசுகையில் தேர்தல் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பிற விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம் என்றார்.

வெள்ள நிவாரணப் பணிகளுக்குத் தடை வருமா
தமிழகத்தில் பல மாவட்டங்கள் கன மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இங்கு வெள்ள நிவாரணப் பணிகள் இன்னும் முடியவில்லை. பலருக்கு வெள்ள நிவரண நிதியும் போய்ச் சேரவில்லை. இந்தநிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இவற்றைத் தொடருவதற்கு விலக்கு அளிக்குமா என்ற கேள்விக்கு அதுகுறித்து ஆலோசிக்கப்படவில்லை என்று ராவத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications