ராஜஸ்தான் தேர்தல்.. காங். தலைவருக்கு தொடர்புடைய இடங்களில் ED சோதனை.. அசோக் கெலாட் மகனுக்கு சம்மன்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், தனது மகனுக்கு சம்மன் அனுப்பியிருப்பதாக அசோக் கெலாட் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் வரும் நவம்பர் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் அக்கட்சியை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதேபோல், காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. ராஜஸ்தானில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனல் பறக்கும் பிரசாரத்தில் இரு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

இப்படி ராஜஸ்தானின் தேர்தல் களம் கொதித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ராவிற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய ரிசர்வ் படை வீரர்களுடன் வந்த அமலாக்கத்துறையினர் கோவிந்த் சிங் தோதஸ்ராவிற்கு சொந்தமான ஜெய்பூர் மற்றும் ஷிகர் நகரில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
அசோக் கெலாட் மகன்: அதேபோல், ராஜஸ்தானில் உள்ள சுயேட்சை எம்.எல்.ஏ ஓம்பிரகாஷ் ஹூடாவிற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது மஹுவா சட்டமன்ற தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏவாக இருக்கும் ஓம்பிரகாஷ் ஹூடாவிற்கு அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சி டிக்கெட் வழங்கியுள்ளது. இந்த நிலையில், தான் இவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட்டின் மகன் வைபவிற்கு அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துரை சம்மன் அனுப்பியதாக செய்திகள் பரவின. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்த தகவலை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் நகலை பகிர்ந்து பதிவிட்டு இருந்தார்.
பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: மகளிர் மற்றும் ஏழை மக்களுக்கு தமது அரசு செயல்படுத்தும் திட்டங்களை பாஜக தடுக்க முயற்சிப்பதாகவும் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகளை குறிவைத்து மத்தியில் ஆளும் பாஜக அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளை ஏவி விடுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் தொடர் குற்றச்சாட்டாக உள்ளது. இத்தகைய சூழலில் தான் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோதனை குறித்து தற்போது வரை அமலாக்கத்துறை எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ராஜஸ்தானில் அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் வினாத்தாள் லீக் ஆனது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ராவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications