நாத்தனார்களுக்குள் சண்டை.. 8 மாத குழந்தையை துள்ளத் துடிக்க எறிந்து கொன்ற கொடூரம் - நடந்தது என்ன?
கொல்கத்தா : இரண்டு பெண்களுக்கு இடையே நடந்த தகராறில் எட்டு மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த குடும்ப சண்டையில், பெண் ஒருவர், தாயிடமிருந்து 8 மாத குழந்தையைப் பறித்து கீழே தூக்கி எறிந்து கொன்றுள்ளார்.
குழந்தையின் தாய் கொடுத்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடும்பச் சண்டையில் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப சண்டை
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ராஜர்ஹத் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு வீட்டில் சண்டை நடந்துள்ளது. சண்டையை தடுப்பதற்கு அந்த வீட்டின் மருமகளான ஷானாஸ் காதுன் (22) முயன்றுள்ளார். இதையடுத்து அவருக்கும் அவரது நாத்தனாரான யாஸ்மினா பிபி என்ற பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சண்டை முற்றியதில் ஷானாஸ் வைத்திருந்த குழந்தையை யாஸ்மினா பறித்துள்ளார்.

குழந்தையை பறித்து
ஷானாஸின் எட்டு மாத குழந்தையை அவரிடமிருந்து பறித்த யாஸ்மினா, குழந்தையை தரையில் தூக்கி எறிந்துள்ளார். இதனால் குழந்தையின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட குழந்தையின் தாய் ஷானாஸ் அலறியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர்.

சுற்றி வளைத்து
பின்னர் உடனடியாக குழந்தையை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே, சண்டையில் குழந்தையை தரையில் எறிந்த யாஸ்மினாவையும் அவருடன் இருந்த நால்வரையும் சுற்றி வளைத்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்களை பிடித்துக் கொடுத்துள்ளனர்.

குழந்தை பலி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத குழந்தை எந்த வித அசைவும் இல்லாமல் இருந்த நிலையில் நேற்று காலை குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து யாஸ்மினா, சாந்தினி உள்ளிட்ட நான்கு பேரை போலீசாரை கைது செய்துள்ளனர். குடும்பச் சண்டையில் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications