பெங்களூரில் பள்ளி வேன் ஏறி 8 வயது சிறுமி உடல் நசுங்கி பலி

பெங்களூர் சந்திரா லே அவுட்டில் உள்ளது சித்தகங்கா பப்ளிக் ஸ்கூல். அந்த பள்ளியில் சந்திரா லே அவுட்டைச் சேர்ந்த நமீதா(8) 2ம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை பள்ளி முடிந்த பிறகு அவர் பள்ளி வேனில் வீட்டுக்கு வந்துள்ளார். வீடு முன்பு இறங்கிய அவர் தனது பையை வாகனத்திலேயே வைத்துவிட்டார். இதை பார்த்த அவரின் நண்பர்கள் பையை தூக்கி ஜன்னல் வழியாக கீழே போட்டனர். வேனின் சக்கரம் அருகே விழுந்த பையை நமீதா குனிந்து எடுத்துள்ளார்.
அப்போது டிரைவர் வேனை எடுக்க நமீதா நிலைதடுமாறி விழ அவர் மீது வாகனம் ஏறியது. இதில் உடல் நசுங்கிய அவரை உடனே நாகர்பவியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நமீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வேன் டிரைவர் பிரோஸ் கான்(26) என்பவரை கைது செய்தனர். பிரோஸ் அந்த பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக வேன் டிரைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications