சசிகலாவின் பதில் கடிதம்: 14ஆம் தேதிக்குள் பதிலளிக்க ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
சசிகலாவின் பதில் கடிதம் தொடர்பாக விளக்கமளிக்க ஓபிஎஸ் அணியினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: சசிகலாவின் பதில் கடிதம் தொடர்பாக விளக்கமளிக்க ஓபிஎஸ் அணியினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் 14ஆம் தேதிக்குள் ஓபிஎஸ் அணியினர் விளக்கம் தர வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது செல்லாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் உள்ளிட்ட 12 எம்பிக்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர்.
இதற்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டிஸ் அனுப்பியது. ஆனால் அந்த நோட்டிஸ்க்கு அதிமுக துணை பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டிடிவி.தினகரன் பதிலளித்தார்.
இதனை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் கட்சியில் எந்த அதிகாரத்திலும் இல்லாத ஒருவரின் பதிலை ஏற்க முடியாது என தெரிவித்தது. இதையடுத்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா கடந்த 10ஆம் தேதி தனது வழக்கறிஞர்கள் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு 70 பக்கங்களை கொண்ட கடிதத்தை அளித்தார்.
அதில் தன்னை எதிர்ப்பவர்கள்தான் தன்னை பொதுச்செயலாளராக முன்மொழிந்தார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் சசிகலாவின் பதில் கடிதத்துக்கு விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் அணிக்கு உத்தரவிட்டுள்ளது. வரும் 14ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.