மோடி அலை இன்னும் ‘சுனாமி’யாக வீசிக் கொண்டு தான் இருக்கிறது... : அமித்ஷா
மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் வெற்றிகள் மூலம் மோடி அலை சுனாமியாக வீசிக் கொண்டு தான் இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அமித்ஷா.
கடந்த 15ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதன்படி, தேர்தல் நடைபெற்ற இரண்டு மாநிலங்களிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், இத்தேர்தல் வெற்றி குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறுகையில்,
மக்கள் தீர்ப்பு...
இது ஒரு மாபெரும் வெற்றி. எங்கள் கட்சி தொண்டர்கள் உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர் எந்தவொரு சர்ச்சைக்கும் சிக்காதவர் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
அங்கீகாரமும், ஆதரவும்...
பிரதமர் மோடியின் அரசுக்கும் மக்கள் கொடுத்த அங்கீகாரம். மோடியின் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
3வது இடத்தில் காங்கிரஸ்...
அரியானாவில் 33 சதவீத ஓட்டுக்களும், மகாராஷ்ட்டிராவில் 28 சதவீத ஓட்டுக்களும் பெற்றுள்ளோம். காங்கிரஸ் கட்சி 3 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
காங். இல்லாத இந்தியா...
எங்களின் திட்டமான காங்கிரஸ் இல்லாத இந்தியா வரவேண்டும் என்பது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்.
ஆட்சி அமைப்போம்...
இரு மாநிலங்களிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம். சிவசேனாவுடனான உறவை நாங்கள் முறித்து கொள்ளவில்லை. இந்த உறவு முறிவுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
மோடி அலை...
மோடியின் அலை இன்னும் சுனாமியாக வீசிக்கொண்டு தான் இருக்கிறது. எதிர்கட்சியினர் தவறாக செய்தி பரப்புகின்றனர்.
விரைவில் முடிவு...
மகாராஷ்டிராவில் கூட்டணி பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும். இங்கு நிலையான ஆட்சி அமையும். யாரும் கவலைப்பட வேண்டாம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.