வருது வருது குஜராத் ராஜ்யசபா தேர்தல்... இம்முறையும் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க காங். தீவிரம்
அகமதாபாத்: குஜராத்தில் ஏப்ரல் மாதம் 4 எம்.பி. இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெறுவதால் ஆண்டின் தொடக்கத்திலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் அமித்ஷா, ஸ்மிருதி இரானி இருவரும் போட்டியிட்டு வென்றனர். இதனால் இருவரும் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் முயற்சிகளில் பாஜக தீவிரமாக இறங்கியது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டனர்.
இந்நிலையில் குஜராத்தின் 4 எம்.பிக்கள் பதவிக் காலம் முடிவடைவதால் ஏப்ரல் மாதம் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸின் மதுசூதன் மிஸ்திரி மற்றும் பாஜகவின் 3 எம்.பிக்கள் பதவி காலம் முடிவடைகிறது.
தற்போது குஜராத் சட்டசபையில் பாஜகவுக்கு 103, காங்கிரஸுக்கு 71 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எந்தவித குதிரை பேரம், கட்சி தாவல் போன்ற களேபரங்கள் இல்லாமல் இருந்தால் இரு கட்சிகளும் தலா 2 எம்.பிக்களை எளிதாக தேர்வு செய்ய இயலும்.
அதேநேரத்தில் 3 எம்.பிக்களை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என பாஜக முடிவு செய்தால் மீண்டும் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியதிருக்கும். இதனால் இப்போதே குஜராத் அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications