100வது பிறந்த நாளை கொண்டாடிய நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர்!
கொச்சி: உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நேற்று தமது 100வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
நீதிபதி கிருஷ்ணய்யரின் பிறந்த நாள் நவம்பர் 15. ஆனாலும் மலையாள காலண்டரின் படி நேற்று அவர் பிறந்த நட்சத்திரம் வந்ததால் 100வது பிறந்த நாளை கொண்டாடினார்.
கொச்சியில் உள்ள அவரின் வீட்டில் காலையில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், கேரளா உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி அசோக் பூஷன், பிரபல பாடகர் ஜேசுதாஸ் உட்பட பலர் கிருஷ்ணய்யரின் வீட்டுக்குச் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, கேரளா ஆளுநர் சதாசிவம் உள்ளிட்டோரும் வி.ஆர். கிருஷ்ணய்யருக்கு 100வது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.