சிஐஏவை விட வலிமையானது.. லடாக்கில் இறங்கிய எஸ்எப்எப் உளவு படை.. கலக்கத்தில் சீனா.. இந்தியா செம மூவ்!
லடாக்: லடாக்கில் இந்தியாவின் சிறப்பு உளவு படையான எஸ்எப்எப் படை களமிறக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த மூவ் சீனாவை கதிகலங்க வைத்துள்ளது. எஸ்எப்எப் படையின் வருகையை சீனா கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.. அது என்ன எஸ்எப்எப் படை?
Recommended Video
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இரவு லடாக் எல்லையில் நடந்த சம்பவங்களை பார்த்து இப்போதும் சீனா அதிர்ச்சியில் இருக்கிறது. பாங்காங் திசோவின் தெற்கு பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தலாம், இடங்களை ஆக்கிரமிக்கலாம் என்று நினைத்த சீனாவிற்கு இந்திய சர்ப்ரைஸ் அதிர்ச்சி ஒன்றை பரிசளித்தது.
லடாக்கில் பாங்காங் திசோ அருகே சீனாவின் படைகள் சில மலைகள் ஆக்கிரமிக்க நினைத்தது. ஆனால் சீனாவிற்கு இடம் கொடுக்காமல், மிக துரிதமாக செயல்பட்டு, இந்தியா தனது படைகளை அனுப்பி, லடாக்கில் இருக்கும் மலைகளை கைப்பற்றியது.. சீனா இப்போதும் கூட இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரவில்லை. எப்படி எங்கள் ஊடுருவலை இந்தியா கண்டுபிடித்தது என்று சீனா இன்னும் குழப்பத்தில் இருக்கிறது!

இந்தியாவின் சிறப்பு படை
இங்குதான் இந்தியாவின் சிறப்பு உளவு படையான எஸ்எப்எப் எனப்படும் ஸ்பெஷல் பிரண்டியர் போர்ஸ் ( Special Frontier Force -SFF) கவனம் பெறுகிறது. சீனாவின் கண்ணில் மண்ணை தூவி, இந்தியா லடாக்கில் முக்கிய இடங்களில் படைகளை குவிக்க இந்த எஸ்எப்எப் படைதான் காரணம். உலகில் எந்த நாட்டிடமும் இப்படி ஒரு படைப்பிரிவு இல்லை. ஏன் அமெரிக்காவின் சிஐஏ படைப்பிரிவை விட இந்த எஸ்எப்எப் படைப்பிரிவு மிகவும் வித்தியாசமானது வலிமையானது.

யார் இவர்கள்?
முதலில் எஸ்எப்எப் படை என்றால் என்ன என்று பார்ப்போம்.. எஸ்எப்எப் என்பது ராணுவத்தின் ஒரு படைப்பிரிவு கிடையாது. தனியாக பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் படைப்பிரிவு ஆகும் இது. தற்போது இந்த எஸ்எப்எப் பிரிவுதான் லடாக்கில் களமிறக்கப்பட்டுள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 1962ல்தான் அதிகாரபூர்வமாக இந்த பிரிவு உருவாக்கப்பட்டது. திபெத்தில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்த ராணுவ வீரர்கள், இளைஞர்களை வைத்து இந்த படை உருவாக்கப்பட்டது.

படை உருவாக்கப்பட்டது எப்படி?
இந்த படை எப்படி உருவாக்கப்பட்டது என்பதை பார்க்கும் முன், ஏன் உருவாக்கப்பட்டது, சீனாவின் அத்துமீறலை எப்படி இந்த படை தடுத்தது என்று முதலில் பார்க்கலாம். முழுக்க முழுக்க சீனாவை மனதில் வைத்துதான் இந்த படை உருவாக்கப்பட்டது. முன்னாள் ராணுவ தளபதி சுஜன் சிங் உபான் என்பவர் மூலம் இந்த படை உருவாக்கப்பட்டது. இவர் இந்திய ராணுவத்தின் 22வது மவுன்டெயின் ரெஜிமென்ட் மேஜராக இருந்த காரணத்தால் இந்த எஸ்எப்எப் படைக்கு எஸ்டாபிளிஷ்மென்ட் 22 ( ‘Establishment 22') சிறப்பு பெயரும் இருக்கிறது.

தனியாக செயல்படும்
இந்திய ராணுவத்திற்காக உளவு வேலைகளை இந்த எஸ்எப்எப் படை பார்த்து வருகிறது. உத்தரகாண்டில் இருக்கும் சக்ரதா என்ற பகுதியை தலைமையிடமாக கொண்டு இந்த படை இயங்கி வருகிறது. 5000 வீரர்கள் வரை இந்த படையில் தற்போது இருக்கிறார்கள். மலைகள், நிலப்பகுதி, எதிரிநாடு, கடும் குளிர் என்று அனைத்து சூழ்நிலையிலும் வேகமாக, துரிதமாக செயல்பட இந்த படைக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

விகாஸ் யூனிட்
இந்த படைக்கு விகாஸ் யூனிட் என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. 16000 அடி உயரமான மலையில் கூட இவர்கள் துரிதமாக செயல்படும் திறனை கொண்டவர்கள். இவர்கள் எல்லோரும் திபெத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இமயமலை பகுதியில் எளிதாக செயல்படும் திறன் கொண்டவர்கள். சீனர்கள், சாதாரண இந்திய படை வீரர்கள் போல இல்லாமல், எவ்வளவு உயரத்திலும் இவர்கள் சண்டை போடும் திறன் கொண்டவர்கள். இவர்கள் உடல்வாகு இதற்கு ஒத்துழைக்கிறது.

வாலிபால்
கடந்த சில வாரம் முன் வெளியான வீடியோ ஒன்றில் சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதில் சீன வீரர்கள் உயரம் காரணமாக மூச்சு விட முடியாமல் திணறியது வீடியோவில் பதிவானது. சீன வீரர்கள் இப்படி மூச்சு விடவே கஷ்டப்படும் போது இந்திய வீரர்கள் அங்கு வாலிபால் விளையாடும் அளவிற்கு திறன் கொண்டவர்கள். ஆம் எஸ்எப்எப் வீரர்கள் 16 ஆயிரம் உயரத்தில் கூட வாலிபால் விளையாடும் திறன் கொண்டவர்கள்.

எப்போதும் ரகசியம்
அந்த அளவிற்கு திறமை கொண்டது இந்த எஸ்எப்எப். இந்திய ராணுவமும், பாதுகாப்பு படையும் எப்போதும் எஸ்எப்எப் வீரர்கள் குறித்து ரகசியம் காத்தே வந்து இருக்கிறது. சிஐஏ, மொஸாட் போல ரகசியமாக இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். சீன எல்லையில் தற்போது இவர்கள் இருப்பது கூட உறுதியாக வெளியே தெரிவிக்கப்படவில்லை. சீனா எல்லையில் ஊடுருவ போகிறது, மலைகளை பிடிக்க திட்டமிடுகிறது என்பதை எஸ்எப்எப் படைதான் கண்டுபிடித்தது என்று கூறுகிறார்கள் .

உளவு வீரர்கள்
சீனாவில் உளவு பார்க்கும் எஸ்எப்எப் வீரர்கள், சீனாவின் ஊடுருவல் திட்டத்தை முன்பே கண்டுபிடித்து உள்ளனர். அதன்பின் எல்லைக்கு வேகமாக எஸ்எப்எப் வீரர்களை அனுப்பி , மலைகளை பிடித்துள்ளனர். அதாவது உளவு பார்ப்பது, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது என்று இரண்டு பணிகளையும் இவர்கள் செய்யும் திறன் கொண்டவர்கள். மொஸாட் , சிஐஏ போன்ற உளவுப்படை உளவு பணிகளை மட்டுமே செய்யும் நிலையில் எஸ்எப்எப் இரண்டு விதமான பணிகளையும் செய்கிறது.

ரா கட்டுப்பாடு
அதிலும் இந்த எஸ்எப்எப் படை இந்தியாவின் உளவுப்படையான ரா (RAW) மூலம் நேரடியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க உளவு பணிகளை சீனாவின் எல்லையிலும் சீனாவிற்கு உள்ளேயும் எஸ்எப்எப் செய்து வருகிறது. கடந்த சில நாட்கள் முன் லடாக் எல்லையில் டேன்சின் நயீமா என்ற வீரர் குண்டு வெடித்து பலியானார். இவர் எஸ்எப்எப் படைப்பிரிவை சேர்ந்தவர்.

எங்கே
லடாக்கில் பாங்காங் திசோ அருகேதான் இவர் பலியானார். இவரின் மரணம், லடாக்கில் எஸ்எப்எப் வீரர்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது. 1950ல் இருந்து இந்த படையை உருவாக்கி 1962ல் அதிகாரபூர்வமாக தொடங்கி உள்ளனர். சிஐஏ இந்த படைக்கு நேரடியாக பயிற்சி கொடுத்துள்ளது. இவர்கள் பார்க்க சீனர்கள் போலவே இருப்பதால் சீனாவில் உளவு பணிகளை செய்யவும் இவர்கள் அனுப்பப்படுகிறார்கள்.

இரண்டு உதாரணம்
இவர்களின் உளவு திறனுக்கு இரண்டு விஷயங்கள் எப்போதும் எடுத்துக்காட்டாக கூறப்படும் . 1964ல் சீனா அணு ஆயுத சோதனை நடத்த போவதாக செய்திகள் வந்தது. ஆனால் இதை அமெரிக்காவின் சிஐஏ உறுதி செய்ய முடியவில்லை. அப்போது எஸ்எப்எப் படைத்தான் சீனாவிற்குள் சென்று உளவு வேலைகளை பார்த்து, சீனாவின் அணு ஆயுத சோதனை குறித்த தகவல்களை அமெரிக்காவிற்கு அளித்தது.

இப்போது வந்துள்ளனர்
அதேபோல் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிவதற்கு உளவு ரீதியான உதவிகளை இந்த எஸ்எப்எப் படைதான் உருவாக்கியது. தற்போது சீனாவை கதிகலங்க வைக்க சீனாவிற்கு உள்ளேயே எஸ்எப்எப் படை இறங்கி உள்ளது என்கிறார்கள். முன்னாள் பிரதமர் நேரு மூலம் இந்த படைகள் உருவாக்க திட்டங்கள் போடப்பட்டுள்ளது . 1960களில் உருவாக்கப்பட்ட இந்த படை.. மிக அமைதியாக யாருக்கும் தெரியாமல் இந்தியாவின் எல்லைகளை காத்து வருகிறது.












Click it and Unblock the Notifications