சொத்துப் பிரச்சினை... முன்னாள் ராணுவ வீரரை அடித்துக் கொன்ற மனைவி, மகள் - உ.பி.யில் பயங்கரம்
அமேதி: சொத்துப் பிரச்சினைக் காரணமாக உத்திரப்பிரதேசத்தில் முன்னாள் ராணுவ வீரரை அவரது மனைவியும், மகளும் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள கொச்சிட் கிராமத்தில் முசாபிர்கானா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜப்பார். இவருக்கு மஹிஜாபன் என்ற மனைவியும், ஷாமா, ஷாகின் என இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.
இதில், மூத்தமகள் ஷாமா கணவர் வீட்டில் இருக்க, இளைய மகள் ஷாகின் மட்டும் தனது கணவருடன் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சமீபகாலமாக சொத்து முழுவதையும் இளைய மகள் பேரில் எழுதித் தரச் சொல்லி ஜப்பாரை வற்புறுத்தி வந்துள்ளார் அவரது மனைவி மஹிஜாபன். ஆனால் ஜப்பார் அதற்கு உடன்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மஹிஜாபன் தனது மகள் ஷாகினுடன் சேர்ந்து சம்பவ தினத்தன்று ஜப்பாரைக் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஜப்பார் சுல்தான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்து விட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தௌ வந்த போலீசார், தாய் மற்றும் மகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.