சாமியாராக மாறினார் மாஜி ஐஏஎஸ் அதிகாரி ஐ.ஆர்.பெருமாள்!
பெங்களூர்: கர்நாடகாவில் பணியாற்றிய தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மாஜி ஐஏஎஸ் அதிகாரி பெருமாள், சிவபெருமான் மீதான பக்தியால் சன்னியாசம் பூண்டு சாமியாராக மாறிவிட்டார்.
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவிலுள்ள இஞ்சிமேடு கிராமத்தில் பெற்றோருக்கு ஐந்தாவது பிள்ளையாக பிறந்தவர் ஐ.ஆர்.பெருமாள். படிப்பால் உயர்ந்து, 1982ம் ஆண்டு கர்நாடக பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாக பணி நியமனமானார்.

இதன்பிறகு, கர்நாடகாவின் பல மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றினார். இவர் மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த ரெய்ச்சூர் மாவட்டத்தில் திடீரென பெய்த கனமழையின்போது மக்கள் பலரும் வெள்ளத்தில் சிக்கினர். அப்போது பெங்களூருக்கு பணி நிமித்தமாக வந்திருந்த பெருமாள், உடனடியாக ரெய்ச்சூருக்கு சென்று வெள்ளத்தின் நடுவே மாட்டு வண்டி கட்டிக்கொண்டு மக்களை மீட்டு வந்தார்.
இதன்காரணமாக, அம்மாவட்டத்தைவிட்டு பணியிடமாற்றம் செய்தபோது, மக்களே வீதிக்கு வந்து கலெக்டரை மாற்றக்கூடாது என்று போராட்டங்கள் நடத்தினர். இதன்பிறகு கர்நாடக உணவு வழங்கல் துறை அமைச்சக முதன்மை செயலராக பணியாற்றியபோது, 1991ம் ஆண்டு, காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு வெளியானது. கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர், படுகொலை செய்யப்பட்டனர்.
அப்போது பெங்களூர் போலீஸ் கமிஷனராக இருந்த தமிழரான ராமலிங்கத்தை, பெருமாள் அணுகி, தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கேட்டுக்கொண்டாராம். ஆனால் தனது பேச்சை இந்த நேரத்தில் ஒரு கான்ஸ்டபிள் கூட கேட்கமாட்டேன் என்கிறார்கள் என்று கமிஷனர் வருத்தப்பட்டதாக கூறப்படுவதுண்டு. இதைத்தொடர்ந்து, அரிசி ஆலை உரிமையாளர்கள மிரட்டி, வீடு, உடமைகளை இழந்து வீதியில் நின்ற, தமிழர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார் பெருமாள்.
இந்நிலையில், பல்வேறு துறைகளில் முதன்மை செயலாளர்களாக பதவி வகித்த பெருமாள் கடந்தாண்டு ஓய்வு பெற்றார். அதன்பிறகு, பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறந்த எடியூரப்பா மீது மதிப்பு வைத்து, அவர் தொடங்கிய கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்து பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவாஜிநகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் படுதோல்வியடைந்தார். அதன்பிறகு அரசியலில் இருந்து விலகியே இருந்துவருகிறார்.
பெருமாள் தனது பணிக்காலத்திலேயே, சொந்த ஊரான இஞ்சிமேட்டில் சிவனுக்கு கோயில் எழுப்பி, கோயில் விழாவை விமரிசையாக நடத்திவந்தார். இப்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில் முழுக்க சாமியாராகிவிட முடிவு செய்துவிட்டார். இதற்கு ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட அவரது மனைவியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. தனது பெயரை சிவயோகி பெருமாள் என்று மாற்றிக்கொண்டுள்ளார். இஞ்சிமேடு சிவன் கோயில் பெருமையை பரப்புவதிலேயே முழு கவனமும் செலுத்த உள்ளதாக பெருமாள் கூறுகிறார். பெருமாளின் மகளும் கடந்தாண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதிகாரம், அரசியல் ஆகியவற்றை துறந்து சன்னியாசியாக முடிவெடுத்துள்ள பெருமாளை கர்நாடக மக்கள் பாராட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications