பீகாரில் தடையை மீறி மது அருந்திய ஆளும் ஐ. ஜனதா தளம் மாஜி எம்எல்ஏ கைது
பாட்னா: பீகார் மாநிலத்தில் ஆட்சி செய்துவரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சியில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் எம்எல்ஏ லலான் ராம் மது அருந்துவது போல வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அம்மாநிலத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தினார். இதையடுத்து, பூரண மது விலக்கை கொண்டு வர கடும் தண்டனை சட்டங்களும் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தின்படி தடையை மீறி மது விற்பனை செய்தாலோ அல்லது சாராயம் காய்ச்சினாலோ பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மது குடித்து தகராறு செய்பவர்களுக்கும் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது.
பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் எம்எல்ஏ லலான் ராம் மது அருந்துவது போல வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக ஐக்கிய ஐனதா தளத்தின் எம்.எல்.சி மனோரமா தேவி மதுவிலக்கை மீறும் வகையில், வீட்டில் மதுபானங்களை பதுக்கியதாக புகார் எழுந்தது. இதனால் மனோரமா தேவி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் தற்போது இரண்டாவதாக லலான் ராமும் இணைந்துள்ளார். இந்த சம்பவம் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications