முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்பு போராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்ள விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
டெல்லி: நிதி ஆயுக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி வரவுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்திக்கவுள்ளதால் அவர் முன்னிலையில் தங்களது 40 நாள்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
வறட்சி நிவாரணத்தை அதிகரித்து வழங்குதல், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் மத்திய அரசு செவி சாய்க்காததால் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்த வரும் 25இல் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு தமிழகத்தில் 25ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக் கட்சி கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்துக்கு முன்பாக விவசாயிகளை சந்திக்க உள்ளார்.
அப்போது அவர் முன்பு தங்களது 40 நாள்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் தமிழகத்தில் 25ஆம்தேதி நடைபெறும் முழு கடை அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவும் தீர்மானித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications