பேஸ்புக்கில் 'ஹாய் சிஷ்யா'ன்னு சொன்னது குத்தமாய்யா? பெங்களூர் வாலிபரை குத்தி கொன்ற நண்பர்கள்
பெங்களூர்: பேஸ்புக் சாட்டிங்கில் 'ஹாய் சிஷ்யா' என்று கமெண்ட் போட்டதால் ஏற்பட்ட தகராறு காரணமாக 24 வயது இளைஞர் நண்பர்களால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் பேட்டஹலசூரு பகுதியை சேர்ந்தவர் அருண் ராவ் (24). இவரும், ஹுன்சேமாரனஹள்ளி பகுதியை சேர்ந்த சந்தீப் என்பவரும் கல்லூரி கால தோழர்கள் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், இவர்கள் மற்றும் மேலும் சில நண்பர்கள் கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு ரவுடித்தனம் செய்து கொண்டு திரிந்துள்ளனர். அருண் ராவ், பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு பெட்டக நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.
சிஷ்யா
இந்நிலையில், சில தினங்கள் முன்பு, சந்தீப்பின் பேஸ்புக் கருத்து ஒன்றின்கீழ், அருண் நண்பர் அஜித் என்பவர் கமெண்ட் அடித்துள்ளார். அப்போது 'ஹாய் சிஷ்யா' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளார்.
பெங்களூர் பாஷை
நட்பு வட்டாரத்திலோ அல்லது ஏரியாவிலோ பெரிய நபராக காட்டிக்கொள்வோரை பார்த்து 'குரு' என்று அழைப்பதும், அதில் அல்லக்கைகளாக இருப்போரை பார்த்து 'சிஷ்யா' என்று அழைப்பதும் பெங்களூரின் லோக்கல் பாஷையாகும்.
கவுரவ குறைச்சல்
எனவே, சிஷ்யா என்று தன்னை அழைத்ததை சந்தீப் கவுரவ குறைச்சலாக எடுத்துக்கொண்டு அஜித்தை கமெண்டில் திட்டியுள்ளார். ஆனால் அருண், அஜித்துக்கு ஆதரவாக கமெண்ட் போட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சந்தீப், தனது தோழர்கள் சிலரை அனுப்பி அருணை அடித்து உதைத்துள்ளார்.
இரவில் இழுத்துப்போன ரவுடிகள்
இதனால் பயந்துபோன, அருண் தாய் அமராவதி, தமிழகத்திலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு அருணை சில நாட்கள் அனுப்பி வைத்துள்ளார். இதன்பிறகு, கடந்த மாதம் 26ம் தேதி வீடு திரும்பியுள்ளார் அருண். இதை அறிந்த சந்தீப்பின் ஆட்கள் கடந்த 29ம் தேதி திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் வீட்டுக்கு வந்து அருணை இழுத்துச் சென்றுள்ளனர்.
தேடுதல் வேட்டை
பயந்துபோன அமராவதி கத்தி, கூச்சலிட்டும் அக்கம்பக்கத்தில் யாரும் உதவிக்கு வரவில்லை. இதையடுத்து தனது இன்னொரு மகன் அஜித்துக்கு போன் அழைப்பு செய்து தகவல் தெரிவித்துள்ளார். அஜித் அவரது நண்பர்களோடு அருணை தேடியலைந்துள்ளார்.
குத்தி கொலை
இந்நிலையில், பாகலூர் கிராஸ் பகுதியில், அருண் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த, அஜித் மற்றும் நண்பர்கள், அருகேயுள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால், வயிற்றில் கத்தி குத்துபட்டு கிடந்த அருண் மருத்துவமனையில் உயிரை விட்டார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சிக்கஜாலா போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications