Bihar SIR: பீகார் தேர்தல் எப்போது? இன்று வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல்! 10 பாயிண்டுகள்
டெல்லி: பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே சார் நடவடிக்கை முடிந்து பீகார் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது. சார் தொடர்பான வழக்கு ஒரு பக்கம் நடந்து வரும் சூழலில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அங்கு சார் எனப்படும் சிறப்புத் தேர்தல் திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. சார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போதிலும், அதற்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பீகாரில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் முடிவடைந்துள்ள சூழலில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளன. அடுத்த வாரம் தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக 10 முக்கிய பாயிண்டுகளை நாம் பார்க்கலாம்.
சார் நடவடிக்கை
1. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறிச் சார் திருத்தப் பணிகள் நடைபெற்றன. 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
2. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 1 வரை வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதாவது பிழைகளை மக்களும் கட்சிகளும் சுட்டிக்காட்டி திருத்தம் செய்யக் கோரிக்கை விடுக்கலாம். தகுதியுள்ள எவரும் பட்டியலில் இருந்து விடுபட மாட்டார்கள் என்றும் தகுதியற்ற எவரும் இடம்பெற மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் உறுதியளித்தது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
3. பல்வேறு தரப்பும் இந்த விவகாரத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சார் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்திய போதிலும், நீதிமன்றம் இதற்கு மறுத்துவிட்டது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.
4. இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மால்யா பக்ச்சி ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். சார் நடவடிக்கையில் ஏதேனும் முறைகேடு கண்டறியப்பட்டால் வரைவு வாக்காளர் பட்டியலையே ரத்து செய்வோம் என நீதிமன்றம் கூறியது. மேலும், தேர்தல் ஆணையம் வெளியிட்ட 11 வகையான அடையாள ஆவணங்களுடன் ஆதாரையும் சேர்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
5. போலி ஆவணங்கள் குறித்த தேர்தல் ஆணையத்தின் சந்தேகங்களை நீதிமன்றம் நிராகரித்தது. தகுதியான அனைத்து வாக்காளர்களும் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது.
எதிர்க்கட்சிகள் சந்தேகம்
6. பல்வேறு எதிர்க்கட்சிகளும் சார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நேரம் குறித்தே கேள்வி எழுப்பினர். இது ஏழை மற்றும் சிறுபான்மை சமூகங்களை, குறிப்பாக எதிர்க்கட்சிகளை ஆதரிப்பவர்களை, வாக்களிக்க விடாமல் தடுக்கும் முயற்சி என அவர்கள் சாடினர்.
7. காங்கிரஸின் ராகுல் காந்தி பல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தேர்தல் ஆணையத்திற்கும் பாஜகவிற்கும் இடையே கூட்டுச் சதி நடப்பதாகச் சாடினார். பாஜக வெற்றிக்காகவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகச் சாடினார்.
தேர்தல் ஆணையம்
8. இந்தக் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக நிராகரித்தது. மேலும், புகார் தொடர்பாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு ராகுல் காந்தியிடம் கேட்டுக் கொண்டது.
9. இருப்பினும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ராகுல் காந்தி மறுத்துவிட்டார். மேலும் ராகுல் காந்தி மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பீகாரில் வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக யாத்திரை நடத்தியிருந்தனர்.
10. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அக்டோபர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தேர்தல் ஆணையம் பாட்னாவுக்கு செல்லும் நிலையில், அதன் பிறகு தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications