மத்திய அரசின் பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டம் கிடையாது, கசப்பு மருந்துதான்- அருண் ஜெட்லி
டெல்லி: மோடி அரசின் முதல் பட்ஜெட் வரும் 10ம்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இது கவர்ச்சிகர திட்டங்களை உள்ளடக்கியதாக இல்லாமல் கசப்பு மருந்தை உள் வைத்ததாக இருக்கும் என்று நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.
டெல்லியில் நடந்த இந்திய பட்டைய கணக்காளர்கள் (சார்டட் அக்கவுண்ட்) கூட்டத்தில் ஜெட்லி கூறியதாவது:

நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்கும். எதற்கும் உதவாத கவர்ச்சித் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் இடம் இருக்காது. இது போன்ற திட்டங்களால் அரசின் செலவீனங்கள் அதிகரித்து, இறுதியில் அது மக்களின் தலைகளில் சுமையாக வந்து சேரும் என ஜெட்லி கூறினார். சீர்குலைந்த பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் வகையில் உறுதியான, கடினமான முடிவுகளுடன் கூடியதாக பட்ஜெட் இருக்கும். விலைவாசி நிலவரம் பொறுத்துக் கொள்ளக் கூடிய அளவையும் மிஞ்சி விட்டது. இவ்வாறு அருண்ஜெட்லி தெரிவித்தார்.
பல திட்டங்களுக்கும் அளிக்கப்படும் மானியங்கள், சலுகைகள் இந்த பட்ஜெட்டில் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது. கூட்டணி தயவு இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பாஜக பிடித்துள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளாக, கூட்டணி ஆட்சி நடந்து வந்ததால், மானிய குறைப்பு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுக்க அரசுகள் தயங்கின. எனவே, உறுதியான அறிவிப்புகளை இப்போதுதான் செயல்படுத்த முடியும் என்று பாஜக அரசு நினைக்கிறது.












Click it and Unblock the Notifications