8 பேர் என்கவுண்டர்: 'சுட்டுக் கொல்லுங்கள்...போலீஸ் அதிகாரியின் 'ஆர்டர் ஆடியோ'வால் தொடரும் சர்ச்சை!
சிமி அமைப்பைச் சேர்ந்த 8 பேரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லுங்கள் என்று அதிகாரி செல்போனில் போட்ட ஆர்டர் ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
போபால்: மத்திய பிரதேச சிறையில் இருந்து தப்பிச் சென்றதாகக் கூறி 8 சிமி அமைப்பினரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லுங்கள் என்று உயர் அதிகாரி ஒருவர், போலீசாரிடம் இந்தியில் போட்ட ஆர்டரின் ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் போபால் மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட சிமி அமைப்பினர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு வழக்குகளின் கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் நள்ளிரவில் பணியில் இருந்த காவலரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் போபால் நகரில் இருந்து புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் அங்கு விரைந்தனர். சிமி அமைப்பினர் 8 பேரையும் பிடிக்க முயன்ற போது போலீசாரை நோக்கி அவர்கள் சுட்டதாகவும் பதிலுக்கு போலீசார் இவர்களை சுட்டு பிடித்ததாகவும் போலீசார் அறிவித்தனர்.
இதுதொடர்பாக, போலீசார் தரப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் உடனடியாக வெளியிடப்பட்டது. என்கவுண்டர் சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் உண்மைத் தன்மை இல்லை என்றும், சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டது என்றும் காங்கிரசார், இடதுசாரிகள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை எழுப்பினர். இதனை கடுமையாக மறுத்த மத்திய பிரதேச அரசு இதுகுறித்தெல்லாம் கேள்வி எழுப்பக் கூடாது என்று சொன்னது. மேலும், மத்திய அரசு என்கவுண்டர் சம்பவம் உண்மை என்றும் அதில் பொய் எதுவும் இல்லை என்றும் கூறியது.
இந்நிலையில், 8 பேரை பிடிக்கும் போது, பொறுப்பில் இருந்த போலீசாரிடம், உயர் அதிகாரி ஒருவர் அந்த 8 பேரையும் சுட்டுக் கொல்லுங்கள் என்று செல்போனில் உத்தரவு போட்டுள்ளார். அதிகார தொனியில் இந்தியில் போட்ட அந்த உத்தரவை ஏற்று அங்கிருந்த போலீஸ் 8 பேரையும் சுட்டுக் கொன்றுள்ளது. உயர் அதிகாரியும் போலீசும் பேசிய என்கவுண்டர் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications