ஓட்டுப்பதிவு எந்திரத்தை அடித்து நொறுக்கிய லாலு மகள்: தேர்தல் ஆணையம் வழக்கு
பாட்னா: ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதின் மகளும், பாடலிபுத்திரம் தொகுதியின் வேட்பாளருமான மிசா பாரதி மீது வாக்குப் பதிவுக்கு தடை ஏற்படுத்தியதாக தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். 39 வயதாகும் மிசாபாரதி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
மிசாபாரதி நிற்கும் பாடலி புத்ரா தொகுதியில் வியாழக்கிழமை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து வேட்பாளர் என்ற முறையில் மிசாபாரதி தொகுதி முழுவதும் சுற்றி வந்து ஓட்டுச்சாவடிகளுக்குள் சென்று ஓட்டுப்பதிவை பார்வையிட்டார்.

ஒரு ஓட்டுச்சாவடிக்குள் சென்று அவர் பார்வையிட்ட போது மின்னணு எந்திரத்தில் பழுது ஏற்பட்டு இருந்ததை கண்டு பிடித்தார். இது தொடர்பாக அவர் அந்த ஓட்டுச்சாவடி அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நொறுக்கிய மிசா பாரதி
அதிகாரிகளுடன் மோதல் முற்றியதால் கடும் ஆத்திரம் அடைந்த மிசாபாரதி மின்னணு எந்திரத்தை அடித்து நொறுக்கினார். இந்த சம்பவத்தை ஓட்டு போட வந்த ஒருவர் தன் செல்போனில் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தேர்தல் அதிகாரிகளிடம் புகார்
மிசாபாரதியின் செயல் பற்றி அந்த ஓட்டுச் சாவடி அதிகாரி மேல் அதிகாரிகளிடம் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அந்த ஓட்டுச் சாவடிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் மிசா பாரதி அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வழக்குப் பதிவு
இது குறித்து கூடுதல் தேர்தல் அதிகாரி ஆர். லக்ஷ்மணன் கூறுகையில், "பிக்ரம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 34வது வாக்குச்சாவடியில் மிசா பாரதி அடியாள்களுடன் உள்ளே நுழைந்துள்ளார். அவர் சென்ற சிறிது நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், மிசா பாரதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது' என்று கூறினார்.
மிசா பாரதி புகார்
இதனிடையே, வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்டதாகவும், அதை தடுக்கச் சென்ற தன்னிடம் அங்கிருந்தவர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும் மிசா பாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications