இது தப்பான ரூட்டாச்சே.. ராகுல் யாத்திரைக்கு எதிராக எப்ஐஆர்! அசாம் போலீஸ் அதிரடி.. காரணம் தெரியுமா?
கவுஹாத்தி: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் கேபி பைஜூ ஆகியோர் மீது அசாம் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ என்ற பெயரில் பாத யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடித்தார்.

இதையடுத்து தற்போது 2வது யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கி உள்ளார். இந்த யாத்திரை என்பது மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபெற உள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கம் அளிக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இருந்து கடந்த 14ம் தேதி ராகுல் காந்தி யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரை என்பது மொத்தம் 66 நாட்கள் நடக்க உள்ளது. மொத்தம் 6,713 கிலோமீட்டர் தொலைவை கடந்து மார்ச் மாதம் 20ம் தேதி மும்பையில் முடிவடைய உள்ளது.
மொத்தம் 15 மாநிலங்களில் 110 மாவட்டங்களில் 337 சட்டசபை தொகுதிகள், 100 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக யாத்திரை நடைபெற உள்ளது. மணிப்பூர், நாகலாந்தில் யாத்திரையை முடித்த ராகுல் காந்தி அசாம் மாநிலத்துக்குள் நுழைந்தார். அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் டவுன் பகுதியில் நேற்று யாத்திரை சென்றது. அப்போது திடீரென்று யாத்திரையின் ரூட் என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது யாத்திரைக்கு கேபி ரோடு பகுதியில் அனுமதி வாங்கப்பட்ட நிலையில் அது டவுனை நோக்கி சென்றுள்ளது.
இந்த திடீர் ரூட் மாற்றத்தால் டவுன் பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஒரே நேரத்தில் அதிகளவில் மக்கள் கூடியதால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும் சிலர் கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து அசாம் மாநிலம் ஜோர்காட் சதார் போலீசார் தாமாக முன்வந்து ராகுல் காந்தியின் யாத்திரை மற்றும் அதன் தலைமை அமைப்பாளர் கேபி பைஜூ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த மாநில எதிர்க்கட்சி தலைவர் (காங்கிரஸ்) தேபப்ரதா சைகி கூறுகையில், ‛‛இந்த வழக்குப்பதிவு என்பது அசாமில் ராகுல் காந்தியின் யாத்திரையை தடுப்பதற்கான தந்திரமாக இருக்கிறது. எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட பாதை மிகவும் குறுகலாக இருந்தது. ஆனால் அதிகளவில் மக்கள் கூடியிருந்தனர். இதனால் மாற்றுப்பாதையில் சென்றோம். அசாமில் காங்கிரஸை பார்த்து முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா பயப்படுகிறார்'' என சாடினார்.












Click it and Unblock the Notifications