முன்னாள் காங். எம்.பி. ராஜய்யா வீட்டில் தீ: மருமகள், 3 பேரன்கள் உடல் கருகி பலி
வாரங்கால்: தெலுங்கானாவில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிரிசில்லா ராஜய்யாவின் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அவரின் மருமகள் மற்றும் 3 பேரன்கள் உடல் கருகி பலியாகினர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்காலில் வசித்து வருபவர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிரிசில்லா ராஜய்யா. அவரின் வீட்டில் இன்று அதிகாலை வேளையில் திடீர் என பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த அவரது மருமகள் சரிகா மற்றும் பேரன்கள் அபினவ், அயன் மற்றும் ஸ்ரீயன் ஆகியோர் உடல் கருகி பலியாகினர். சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சரிகா ராஜய்யாவின் மகனை கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்ததுடன் தனது மாமனார் வீட்டுக்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரங்கால் லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட ராஜய்யா கடந்த 31ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அந்த தொகுதியின் காதிம் ஸ்ரீஹரி(தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி) தெலுங்கானா துணை முதல்வர் ஆக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததால் வாரங்கால் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.