கோரக்பூர் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து!... நோயாளிகளுக்கு ஆபத்தில்லை!
ஆக்சிஜன் குறைபாடு காரணமாக கடந்த ஆண்டில் 70 குழந்தைகள் உயிரை பலிவாங்கிய கோரப்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
லக்னோ: கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகக் கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது.
உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் முதல்வர் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றபின் கடந்த 2017ம் ஆண்டில் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்க பணம் செலுத்தாததால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 70 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் பாபா ராகவ் தாஸ் மருத்துக்கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்புக் குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் முக்கிய ஆவணங்கள் பல எரிந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவக் கல்லூரி முதல்வர் அறையில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் தீக்கு இறையாகியுள்ளன. தீ விபத்துக்கான காரணம் என்ன என அதிகாரிகள் கண்டறிந்து வருகின்றனர்.