காளஹஸ்தி கோவிலில் மின்சாரம் தாக்கி 5 தமிழக பக்தர்கள் மயக்கம்
ஸ்ரீகாளஹஸ்தி: காளஹஸ்தி கோவிலில் மின்சாரம் தாக்கியதில் 5 தமிழக பக்தர்கள் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடை விடுமுறை முடியும் தருவாயில் உள்ளதால் திருப்பதி மற்றும் காளஹஸ்தி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
தற்போது கோடை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் காளஹஸ்தி கோவிலில் பக்தர்கள் நெரிசல் காரணமாகவும், வெயில் காரணமாகவும் மயங்கி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, காளஹஸ்தி கோவிலில் அதிக அளவில் மின்விசிறிகளை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவில் அருகேயும், ஞானபிரணாம்பிகா மற்றும் பரிவார தேவதைகள் சன்னதியிலும் அதிக அளவில் மின்விசிறிகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கனகதுர்கா சன்னதியில் மின்விசிறி பொருத்தும் பணி நடந்த போது பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அப்போது திடீரென 5 பக்தர்களை மின்சாரம் தாக்கியது.
இதில் செங்கல்பட்டைச் சேர்ந்த சித்தா (48), அவரது மகள் யோகேஸ்வரர் (10), சித்தூரை சேர்ந்த சுஜாதா (30), அவரது மகள்கள் சத்யவேணி (10), லஹரி (4) ஆகியோர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி செல்லப்பட்டு திருப்பதியில் உள்ள சிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மின்விசிறி பொருத்தும் வழிகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் மாற்று வழிகளில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications