மும்பை: 5 மாடி குடியிருப்பு இடிந்து தரைமட்டம்… 4 பேர் பலி- 5 பேர் படுகாயம்
மும்பை: மும்பை மாநகராட்சி ஊழியர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு இன்று காலையில் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் 4பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் 5 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பை டாக்கியார்டு ரோடு பகுதி பாபுஜேனு மார்க்கெட் ரோட்டில் இந்த குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு இன்று காலை பயங்கர சப்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கினர் இதில் 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள ஒரு குடவுனில் பராமரிப்பு வேலை நடந்தது. இந்நேரத்தில் கட்டடம் இடிந்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இந்த கட்டடம் கட்டி 7 ஆண்டுகள்தான் ஆகிறது. இங்கு 22 குடும்பத்தினர் மாநகராட்சி ஊழியர்கள் வசித்து வந்தனர். மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்று மும்பை மேயர் சுனில்பிரபு கூறினார்.
4 தினங்களுக்கு முன்பு
கடந்த சில தினங்களுக்கு முன் மும்பை ரயில் நிலையம் அருகில் 42 குடும்பங்கள் வசிக்கும் 5 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. விபத்து நடந்த தினத்தன்று காலையில் இருந்தே குடியிருப்பில் அதிர்வு, மற்றும் விரிசல்கள் ஏற்பட்டு இருந்தது கண்டு அச்சம் அடைந்த குடியிருப்பாளர்கள் சுமார் 100 பேர் பாதுகாப்பாக வெளியில் வந்துவிட்டனர்.
7 வது முறை
அடுத்த சில நிமிடங்களிலேயே கட்டிடம் இடிந்து விழுந்ததால், மீதம் இருந்த 10 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர் அவர்கள் மீட்க்கப்பட்டனர். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மும்பையில் கடந்த 6 மாதங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் இடித்து விழுந்து விபத்து ஏற்படுவது இது 7 வது முறையாகும். இந்தாண்டின் தொடக்கத்தில் தானேவில் நிகழ்ந்த கட்டட விபத்தில் 70 பேர் உயிரிழந்தனர்