கோவில் திருவிழா: மாஸ்க், சமூக இடைவெளியை மறந்து.. சாணியால் ஒருவரையொருவர் அடித்துக்கொண்ட மக்கள்!
கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடந்த கோவில் திருவிழாவில் குவித்து வைக்கப்பட்டு இருந்த வறட்டி என்னும் உலர் சாணியை எடுத்து மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
அப்போது அவர்கள் யாரும் மாஸ்க் போடவும் இல்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தாக்கம்
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் உச்சத்தில் சென்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 2,00,000-ஐ கடந்து விட்டது. பல்வேறு மாநிலங்கள் கொரோனவை விரட்டியடிக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இது ஒருபுறமிருக்க கொரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன.

மக்கள் மதிப்பதில்லை
என்னதான் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தாலும் பொதுமக்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் கொரோனவை முழுமையாக ஒழிக்க முடியாது என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து. ஆனால் பல்வேறு இடங்களில் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மதிப்பதில்லை என்பதே உண்மை.

தடுப்பு விதிகளை மறந்தனர்
ஹரித்வாரில் உள்ள கும்பமேளாவில் மாஸ்க் மறந்து, சமூக இடைவெளியை துறந்து பக்தர்கள் ஒன்றுகூடிய வீடியோ சமுக வலைதளத்தில் வைரலானது. இந்த கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களில் மட்டும் கடந்த 4 நாட்களில் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது.. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் கொரோனா தடுப்பு விதிகளை மறந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
|
சாணி அடிக்கும் திருவிழா
அதாவது அஸ்பரி மண்டலம் கைரூப்பாலா என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் தெலுங்கு வருட பிறப்புக்கு மறுநாள் நடக்கும் இந்த திருவிழாவில் வறட்டி எனப்படும் உலர் சாணியை ஒருவரை ஒருவர் வீசி அடித்துக் கொள்வது வழக்கம். இதேபோல் நேற்று நடந்த திருவிழாவில் குவித்து வைக்கப்பட்டு இருந்த சாணியை எடுத்து மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். ஆனால் அப்போது யாரும் மாஸ்க் போடவும் இல்லை. சமூக இடைவெளி என்பது சுத்தமாக இல்லை. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications