மாட்டுத் தீவன ஊழல் வழக்கு- லாலு பிரசாத் குற்றவாளி: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!: எம்.பி. பதவிக்கு சிக்கல்!!
டெல்லி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உட்பட 45 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் லாலு தமது எம்.பி. பதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

வழக்கு என்ன?
கடந்த 1990 ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் பீகார் முதலமைச்சராக இருந்தபோது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ரூ950 கோடி ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஒன்றுதான் போலி ரசீதுகள் தாக்கல் செய்து ரூ. 37.7 கோடி அளவுக்கு லாலு ஊழல் செய்தார் என்ற இந்த வழக்கு.

சிபிஐ நீதிமன்றம்
இது தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உட்பட 45 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வந்தது.

45 பேரும் குற்றவாளிகள்
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. லாலு பிரசாத் யாதவ் உட்பட 45 பேரும் குற்றவாளிகள் என்று சிபிஐ நீதிமன்ற நீதிபதி பிரவாஸ்குமார் சிங்.

4 ஆண்டு தண்டனை?
லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகாலம் தண்டனை கிடைக்கும் என்று சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தகுதி நீக்கம்
2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை நடைமுறைப்படுத்தாமல் இருக்க மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தைப் பிறப்பித்தது.

எம்.பி பதவிக்கு வேட்டு!
ஆனால் இந்த சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் தெரிவிக்கவில்லை. இதனால் தற்போது லாலு பிரசாத் தமது எம்.பி. பதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

3-ந் தேதி தண்டனை
இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட லாலு உட்பட 45 பேருக்கான தண்டனை விவரம் வரும் 3-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications