முஸ்லிம்கள் மீது ஏக கரிசனம் காட்டும் பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை
டெல்லி: பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் மக்கள் மீது ஏகக் கரிசனம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் பற்றி கூறப்பட்டுள்ளதாவது:
ஒற்றுமையில் வேற்றுமைதான் இந்தியாவின் பலமாக பாஜக கருதுகிறது. சிறுபான்மை சமூகத்தினரின் உயரிய கலாசாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அவர்களது சமூக பொருளாதாரமும் மேம்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் பெரும்பான்மை சிறுபான்மை சமூகத்தினர் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் ஏழ்மையில் வாடுகின்றனர். நவீன இந்தியாவில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்.
இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அனைத்து இனத்தவரும் இணைந்து பாடுபட வேண்டும். சிறுபான்மையின இளைஞர்களும் பெண்களும் கல்வி மற்றும் வேலைகளில் பாரபட்சமின்றி வாய்ப்பு பெறுவதை உறுதி செய்வோம்.
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் வலுப்படுத்தி நவீனப்படுத்துவோம். தேசிய மதரசாக்கள் நவீனப்படுத்தும் திட்டங்கள் தொடங்கப்படும்.
சிறுபான்மையினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உருவாக்குவோம். வக்பு வாரியங்கள் மேம்படுத்தப்படும். வக்பு வாரிய சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்கப்படும்.
சிறுபான்மையினர் கலாசார, பாரம்பரிய சின்னங்கள் புதுப்பிக்கப்படும். ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கப்படும். உருது மொழி மேம்பாட்டை உறுதிப்படுத்துவோம். அமைதியான, பாதுகாப்பான வாழ்க்கை முறையை உறுதி செய்வோம். மதத் தலைவர்களை கொண்ட குழு அமைப்பு நல்லிணக்கம் நிலவ பாடுபடுவோம்