முதல் முறை வாக்களிக்க வாய்ப்பு..நடனமாடி கொண்டாடிய குஜராத்தின் 'சித்தி' பழங்குடியினர்.. யார் இவர்கள்?
காந்திநகர்: குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த தேர்தலில் 'ஜம்பூர்' கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றனர்.
மினி ஆப்பிரிக்க கிராமம் என்று அழைக்கப்படும் இந்த ஜம்பூரில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், இதனை பாரம்பரிய நடனமாடி அம்மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோகக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது. அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதே தங்களின் நோக்கம் என்றும், இதன் அடிப்படையில்தான் இவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கிறது எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
குஜராத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? பாஜக வென்றால் அவரே தான்.. சஸ்பென்ஸ் உடைத்த அமித்ஷா
முதல்முறை
குஜராத் மாநிலத்தில் இன்று 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும் என்பதால் இம்மக்களுக்கும் தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையை வழங்கியுள்ளது. இதன் மூலம் இம்மக்கள் முதல் முறைாக வாக்களிக்கின்றனர். இந்த பழங்குடியின மக்கள் 'சித்தி' சமூகத்தினரை சேர்ந்தவர்களாவார்கள். இவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து போர்த்துக்கீசியர்கள் மூலம் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். அதாவது, போர்த்துக்கீசியர்கள் இவர்களை ஆப்ரிக்காவிலிருந்து அடிமைகளாக கொண்டு வந்துள்ளனர்.
வரலாறு
இதனையடுத்து அவர்கள் இந்திய அரச குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதிலிருந்து சிலர் தப்பி சென்று காடுகளில் மறைந்து வாழ தொடங்கியதாகவும், அவர்கள்தான் பின்னாட்களில் இம்மாதிரியாக கூட்டமாக சேர்ந்து தங்களுக்கென ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் கிர் மாவட்டத்தில்தான் அதிக அளவில் வசிக்கின்றனர். இம்மாவட்டத்தின் மதுபூர் ஜம்பூர் கிராமத்தில் வசிக்கும் 3,481 வாக்காளர்களில் சுமார் 90% பேர் 'சித்தி' பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களாவார்கள். இன்று நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 19 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் 4.77 லட்சம் பேர் முதல் முறை வாக்களிக்கின்றனர். இவர்களில் 3.3 லட்சம் இளம் வாக்காளர்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்களால் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டனர்.
தேர்தல்
அதேபோல குஜராத்தில் தேர்தல் அலுவலர்களாக பெண்கள் மட்டுமே பணியாற்றும் வகையில் 1,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முறை பாஜக எப்படியாவது வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று முயன்று வருகிறது. ஆனால் காங்கிரஸ் 8 அம்ச வாக்குறுதியை முன்வைத்து வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகிறது. இதற்கிடையில் ஆம் ஆத்மியும் களத்தில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆம் ஆத்மியை பொறுத்த அளவில் கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் சில இடங்களில் போட்டியிட்டது. ஆனால் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வியடைந்தது. ஆனால் பஞ்சாபில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது புது உத்வேகத்துடன் குஜராத்திலும் களம் இறங்கியுள்ளது.
வெற்றி
எப்படி இருந்தாலும் மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் தலித் சமூகத்தின் வாக்கு வங்கி காங்கிரசுக்கு ஆதரவாகதான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாஜக இம்முறை ஒரேயொரு இஸ்லாமிய வேட்பாளரைக் கூட நிறுத்தாத நிலையில் காங்கிரஸ் 6 பேரை களமிறக்கியுள்ளது. இதனால் சிறுபான்மையினர் வாக்கு வங்கியும் காங்கிரசுக்கு சாதகமாகதான் இருக்கும். பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவும் நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ள சில இடங்களை இம்முறை ஆம் ஆத்மி கைப்பற்றவும் வாய்ப்பிருக்கிறது என கணிப்புகள் கூறியுள்ளன.