ஆபரேஷன் முடிந்து பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த டாக்டர்கள்!
புவனேஸ்வர்: ஒடிஷாவில் குடல்வால் நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணின் வயிற்றில் மருத்துவர்கள் கத்தரிக்கோலை மறந்து வைத்து தைத்த சம்பவம் நடந்துள்ளது.
ஒடிஷா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பினோலோ கிராமத்தைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவரின் மனைவி மினர்வா மொஹந்தி(45). குடல்வால் நோய் மற்றும் வயிற்றில் கட்டி இருந்ததால் மினர்வா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் ஜகத்சிங்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஓய்வு பெற்ற தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரியும் மற்றும் ஒரு டாக்டரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததில் இருந்து மினர்வா தனக்கு அடிக்கடி வயிறு வலிப்பதாகவும், தலை சுற்றுவதாகவும் தெரிவித்து வந்தார்.
அறுவை சிகிச்சை நடந்த மருத்துவமனைக்கு பலமுறை சென்றும் அவர்கள் வலிநிவாரணி மட்டும் அளித்துள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு வலி அதிகமாகவே நிரஞ்சன் தனது மனைவியை அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மாவட்ட தலைமை மருத்துவமனை டாக்டரிடம் அழைத்துச் சென்றார். அப்போது ஸ்கேன் செய்தபோது மினர்வாவின் வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மினர்வாவை கட்டாக்கில் உள்ள கதீஜா நர்சிங் ஹோமுக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டது. கதீஜா நர்சிங் ஹோமில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து 7 இன்ச் நீளமுள்ள கத்தரிக்கோலை மினர்வாவின் வயிற்றில் இருந்து எடுத்தனர்.
இந்த சம்பவம் பற்றி வெளியே கூறாமல் இருக்க கத்தரிக்கோலை வயிற்றில் வைத்த 2 டாக்டர்களுக்கும் தனக்கு ரூ.2 லட்சம் அளிப்பதாக கூறினர் என்று நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட தலைமை மருத்துவமனையின் தலைவர் பினோத் பிஹாரி மொஹந்தி கூறுகையில்,
எங்கள் மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு தனியார் மருத்துவமனையில் சேர்ந்த டாக்டர் ஒருவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். மினர்வா அல்லது அவரது கணவர் புகார் அளித்தால் இது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
மினர்வா கதீஜா நர்சிங் ஹோமில் இருந்து வீடு திரும்பிய பிறகு புகார் அளிக்க முடிவு செய்துள்ளார் நிரஞ்சன்.












Click it and Unblock the Notifications