2ம் வகுப்பு பெட்டியில் தனியாக ரயில் பயணம் செய்யும் உம்மன் சாண்டி… கற்றுக் கொள்ளுமா தமிழகம்!
திருவனந்தபுரம்: இரண்டு முறை கேரள முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் உம்மன் சாண்டி 2ம் வகுப்பு பெட்டியில் ரயிலில் தனியாக பயணம் செய்து அசத்தியுள்ளார்.
நம்ம ஊர்ல வார்டு கவுன்சிலரே ஸ்கார்பியோ கார்கள் புடை சூழதான் வலம் வருகிறார்கள். அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் இவர்களைப் பற்றி எல்லாம் சொல்லவே தேவையில்லை. இதை விட மோசம் என்ன வென்றால் ஆளும் கட்சிகளில் உள்ள பகுதி, வட்டம் போடும் ஆட்டம்தான். தாங்க முடியாது.
இந்த நிலையில், எந்த வித பந்தாவும் இல்லாமல் கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி 2ம் வகுப்பு பெட்டியில் ரயிலில் தனியாக பயணம் செய்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அவருக்கு பெற்ற தந்துள்ளது.
கேரளத்தில் 2 முறை முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன் சாண்டி. 74 வயதான இவர் மிகவும் எளிமையான அரசியல்வாதி என்று பெயர் பெற்றவர். கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து கேரளத்தில் ஆட்சியை பிடித்தது. அதற்கு முன்பு வரை உம்மன் சாண்டித்தான் முதல்வராக இருந்தார். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கார்கள் புடைசூழ செல்லும் விஐபிக்கள் மத்தியில், மிகவும் எளிமையான மனிதராக உம்மன் சாண்டி திகழ்கிறார். அவர் ரயிலில் பயணம் செய்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
விஜபி பயணத்தை விட, சாதாரண படுக்கை வசதி உடைய ரயிலில் பயணம் செய்வது பிடிக்கும் என்றும், கூட்டம் அதிகமில்லாத தொலைதூர ரயில்களில் பயணம் செய்யும்போது, பயணிகளின் அறிமுகமும் கிடைக்கும் என்றும் உம்மன் சாண்டி கூறியுள்ளார். மேலும், இதற்கு முன் அவர், திருவனந்தபுரத்துக்கு பேருந்தில் பயணம் செய்துள்ளதையும் தெரிவித்தார்.