லோக்சபா முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மா மாரடைப்பால் காலமானார்
டெல்லி: லோக்சபா முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் கட்சித் தலைவருமான பி.ஏ. சங்மா (வயது 68) இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து லோக்சபா நடவடிக்கைகள் வரும் 8-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேகலாயா மாநிலத்தின் மேற்கு காரோ குன்றுகள் மாவட்டத்தில் 1947-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி பிறந்தவர் சங்மா. வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்த சங்மா 1988-1990ஆம் ஆண்டு மேகாலயா மாநில முதல்வராக பதவி வகித்தவர்.
1977-ம் ஆண்டு முதல் 8 முறை லோக்சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்; 1996-1998ஆம் ஆண்டு லோக்சபா சபாநாயகராகவும் சங்மா பணியாற்றினார். 1999-ம் ஆண்டு சோனியா வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற பிரச்சனையில் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. அப்போது சரத்பவாருடன் வெளியேறி தேசியவாத காங்கிரஸை உருவாக்கியவர்களில் சங்மாவும் ஒருவர்.
பின்னர் 2004ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸில் இருந்து வெளியேறி மாநில கட்சியை உருவாக்கினார். பின் அக்கட்சியை திரிணாமுல் காங்கிரஸுடன் இணைத்தார் சங்மா. திரிணாமுல் காங்கிரஸில் இருந்தும் விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸில் இணைந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜக, அதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆதரவுடன் பிரணாப் முகர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் சங்மா.
பின்னர் தேசிய மக்கள் கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வந்தார். தற்போது தூரா லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருந்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த சங்மா, இன்று மாரடைப்பால் காலமானார்.
பி.ஏ. சங்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் லோக்சபா நடவடிக்கைகள் மார்ச் 8-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பி.ஏ.சங்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சபையை எப்படி சுமூகமாக நடத்துவது என்பதை சங்மாவிடம் இருந்தே தாம் கற்றதாக கூறியுள்ளார்.