நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த எம்.பி. இ.அகமது மருத்துவமனையில் மரணம்
நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றிய போது மயங்கி விழுந்த கேரளா மாநில எம்.பி இ. அகமது மாரடைப்பால் மரணமடைந்தார்.
டெல்லி: 2017ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தில் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.
அப்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி இ. அகமது தனது இருக்கையிலேயே மயங்கி சரிந்து விழுந்தார். உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு இ.அகமது அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் கவலைக்கிடமாகவே இருப்பதாகவே மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் அவர் அதிகாலை 2.15 மணிக்கு மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சையின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளா மாநிலம் மலப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இ.அகமது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மன்மோகன் சிங் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.