தடுப்பு சுவரில் வேகமாக மோதிய கார்.. நூலிழையில் உயிர் தப்பிய முன்னாள் முதல்வர்! உத்தராகண்ட்டில் ஷாக்
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் ராவத்தின் கார் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அவருக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
ஹரிஷ் ராவத் காரில் ஹல்த்வானியில் இருந்து காஷிபூருக்கு செய்தியாளர் சந்திப்புக்காக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது உதம் சிங் நகரில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் ஹரிஷ் ராவத்துக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டிருக்கிறது. நெஞ்சு வலியால் துடித்த அவரை உள்ளூர் போலீசார் மீட்டு அருகிலிருந்த ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் முதலுதவி சிகிச்சை பெற்றதையடுத்து மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலை அபாய கட்டத்தை தாண்டியதாகவும், அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சாரஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அவருடன் பயணித்த பாதுகாப்பு அதிகாரிகளும் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு கைகளிலும், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியிருக்கிறார். இந்த விபத்து நள்ளிரவு 12.15 மணியளவில் ஏற்பட்டதால் உடனடியாக விபத்து தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது காயமடைந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல ராவத்தின் உடல் நிலை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. விபத்திலிருந்து ராவத்தை காப்பாற்றியதில் உள்ளூர் போலீசாரின் பங்கு அளப்பரியது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் விபத்து தொடர்பாக காவல்துறை தனது விசாரணையை தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications