ஒரேயொரு கேள்வி கேட்ட கலாபவன் மணியின் சகோதரர்: 3 பேரை பிடித்து விசாரித்த போலீஸ்
கொச்சி: கலாபவன் மணியின் மரணம் குறித்து அவரது சகோதரர் ஒரு கேள்வி கேட்டுள்ள நிலையில் போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
நடிகர் கலாபவன் மணி கடந்த 6ம் தேதி இரவு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிர் இழந்தார். கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் அவர் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் மணியின் மரணம் இயற்கை தான் என தெரிவித்தனர்.

அது எப்படி?
மணியிடம் வேலை பார்த்த விபின், முருகன், அருண் ஆகியோர் என் சகோதரருக்கு எப்பொழுது பார்த்தாலும் மதுவை அளித்து வந்தனர். அது எப்படி என் சகோதரர் குடித்த மதுவில் மட்டும் விஷத்தன்மை உள்ள மெதில் ஆல்கஹால் இருந்துள்ளது, அவருடன் குடித்த அந்த 3 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மணியுடன் மது அருந்திவிட்டு அந்த இடத்தை அந்த 3 பேரும் சுத்தம் செய்து தடையங்களை அழித்துள்ளனர் என்று ராமகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

விசாரணை
ராமகிருஷ்ணனின் பேட்டியை அடுத்து போலீசார் விபின், முருகன் மற்றும் அருண் ஆகியோர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். மணி உடல்நலம் பாதிக்கப்பட்ட இரவு அவருடன் விபின், முருகன் மற்றும் அருண் தான் மது அருந்தியுள்ளனர்.

மெதில் ஆல்கஹால்
மணி விவகாரம் பற்றி மருத்துவர் ஒருவர் கூறுகையில், மணி அருந்திய மதுவில் மெதில் ஆல்கஹாலை வேண்டும் என்றே யாராவது கலந்திருக்கலாம். அல்லது அவர் குடித்தது கள்ளச்சாராயமாக இருந்திருக்கலாம். மதுவில் இருந்த மெதில் ஆல்கஹாலின் அளவை வைத்து தான் அது எப்படி வந்தது என்பதை கூற முடியும் என்றார்.

சிபிஐ விசாரணை
மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அது குறித்து மாநில போலீசார் அல்ல மாறாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மலையாள திரையுலகினர் சிலர் விரும்புகிறார்கள். இது குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications