கெஜ்ரிவால் பிடிவாதப் போராட்டம்: டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் தொடர்ந்து மூடல்
டெல்லி: டெல்லி முதல்வர் அறிவித்துள்ள போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுமாறு போலீஸ் உத்தரவிட்டிருந்தது. இன்று முழுவதும் மூடப்பட்ட ரயில் நிலையங்கள் திறக்கப்படவில்லை.
தெற்கு டெல்லியின் மாள்வியா நகரில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சட்ட அமைச்சர் சோம்நாத் பார்திக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைப்போல சகர்பூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ராக்கி பிர்லாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த சம்பவங்களால் அதிருப்தி அடைந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இதில் தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்யுமாறு காவல்துறை தலைவரை கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு போலீஸ் ஆணையர் பி.எஸ்.பஸ்சி மறுப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவை பின்னர் சந்தித்து பேசிய முதல்வர், ‘கடமையை செய்யாத போலீசாரை இடைநீக்கம் செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
இன்று காலை 10 மணிக்குள் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகம் முன் இன்று (20-ந்தேதி) காலை முதல்வர் தலைமையில் ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவர் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தர்ணாவுக்குப் புறப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து 10 நாட்களுக்கு தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே போராடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், உள்துறை அமைச்சரின் அலுவலகம் அமைந்துள்ள டெல்லி மாவட்டம் முழுவதும் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ‘குடியரசு தினம் விரைவில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று முதல் டெல்லி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக' போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டம் காரணமாக 4 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று மூடப்பட்டன. பட்டேல் சவுக், சென்ட்ரல் செக்ட், உத்யோக் பவன், ரேஸ் கோர்ஸ் ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று காலை 9 மணி முதல் மூடப்பட்டுள்ளது. இன்னும் அவை திறக்கப்படவில்லை.
இதனால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியினரின் போராட்டத்தால் சாமானிய மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications