கல்லூரி மாணவி பலாத்காரம்... குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற போலீசார்!
பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களைப் போபால் போலீசார் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
Recommended Video

போபால்: மத்திய பிரதேசத்தில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளை போலீசார் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
மத்திய பிரதேசம் போபாலில் உள்ள மகாராண பிரதாப் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரம்யா (20). கடந்த சனிக்கிழமையன்று சீனியர் மாணவரான சைலேந்திர தாங்கி (21) ரம்யாவை காபி குடிக்க அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது இருவருக்குள்ளும் கல்லூரியில் நடைபெற்ற பழைய பிரச்சினை குறித்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாங்கி, ரம்யாவை சமாதானம் செய்வது போல் நடித்து, அவரை ஏமாற்றி தனது நண்பனான சோனு(21) என்பவரது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ரம்யாவை தாங்கி, சோனு மற்றும் அவர்களது மற்ற இரு நண்பர்களான திராஜ் ராஜ்புத் (26) மற்றும் சிமர் ராஜ்புத் (25) ஆகியோர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வெளியில் கூறினால் ரம்யாவையும், அவரது குடும்பத்தாரையும் கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஞாயிறன்று காலை ரம்யா அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் 4 பேரின் மீது கடத்தல் மற்றும் பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக குற்றவாளிகள் நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களை ஊர்மக்கள் பார்க்கும்படி அதிக மக்கள் கூடும் பிரதான சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது, அங்கு சாலையில் நின்றிருந்த மக்கள் நான்கு இளைஞர்களையும் அடித்து உதைத்தனர்.
குற்றவாளிகளை ஏன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர் என்பது குறித்து போபால் நகர இன்ஸ்பெக்டர் ஜெய்தீப் குமார் கூறுகையில், "இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் முகத்தை மறைக்காமல், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்வதன் மூலம், மான, அவமானத்திற்குப் பயந்து மேலும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட மக்கள் அஞ்சுவர். அதோடு, பாதிக்கப்படும் பெண்களுக்கும் போலீசாரின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது. தங்களுக்கு ஏற்படும் அநீதி குறித்து வெளிப்படையாக அவர்கள் போலீசில் புகார் அளிக்க தைரியமாக முன்வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட நால்வரும் தங்களது குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளதாக டிஐஜி சௌத்ரி தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications