ஓசியில் மீன் தர மறுத்த 4 மீனவர்கள் சுட்டுக் கொலை - பீகாரில் பயங்கரம்
பாட்னா : ஓசி மீன்கள் தர மறுத்ததால் 4 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 24 கி.மீ தொலைவில் உள்ளது முங்கிலா கிராமம். சம்பவத்தன்று அங்குள்ள அரசுக்கு சொந்தமான நீர்நிலையில் மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று, மீனவர்கள் பிடித்த மீனை தங்களுக்கு ஒரு பகுதி பிரித்துத் தர வேண்டும் என கேட்டு தகராறு செய்துள்ளனர்.
மீனவர்கள் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அந்த கும்பல் நள்ளிரவில் சம்பந்தப்பட்ட மீனவர்கள் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் மணீஷ் பிண்ட்(25), உதய் பிண்ட்(34), ஜனார்த்தன் பிண்ட்(19), ராம் பிரவேஷ் பிண்ட் (60) என்ற நான்கு மீனவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார். கொல்லப்பட்ட நான்கு மீனவர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள்.
எனவே, இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவரிடம் விசாரணை நடத்திய போலீசார், ஏழு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் ஜாதிப் பிரச்சினையாக மாறியுள்ளது. காரணம் கொலையாளிகள் உள்ளூரைச் சேர்ந்த உயர் ஜாதியினர் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications