ரூ. 251க்கு ஸ்மார்ட் போன்... இது ஒரு ‘சதுரங்க வேட்டை'?!
டெல்லி: உலகிலேயே மிகவும் குறைந்த விலையில், அதாவது ரூ. 251க்கு எப்படி ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய முடியும் என பாஜக எம்.பி. கிரித் சோமைய்யா கேள்வி எழுப்பியுள்ளார். இது ஒரு மோசடி செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 'மேக் இன் இந்தியா' தொழில் ஊக்கத் திட்டத்தின் கீழ், இந்திய தயாரிப்பு நிறுவனமான ரிங்கிங் பெல்ஸ் மிகக்குறைந்த விலையில், அதாவது ரூ. 251க்கு ஸ்மார்ட் போன் விற்பனையைத் தொடக்கியுள்ளது.
நேற்று முன் தினம் இந்த போன் விற்பனை தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற விழாவில் ஏராளமான பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் இந்த ஸ்மார்ட் போன் வெளியிடப்பட்டது.
ஆனால் இந்த ஃப்ரீடம் 251 போன் அறிமுகப்படுத்தப்பட்டதில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. பலர் இதை மோசடித் திட்டம் என வர்ணிக்க ஆரம்பி்த்துள்ளனர்.
மனோகர் பாரிக்கர்...
ஆரம்பத்தில் இந்த விழாவில் முதலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்து கொள்வதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் கடைசி நேரத்தில் அவர் நிகழ்சியில் பங்கேற்காமல் ஜகா வாங்கி விட்டார். இதனால் முரளி மனோகர் ஜோஷி இந்தப் போனை அறிமுகப்படுத்தினார்.
தனி இணையதளம்...
இந்த போன் விற்பனைக்கென தனிப்பட்ட இணையதளத்தைத் தொடங்கியுள்ளது ரிங்கிங் பெல்ஸ். ஆனால், முதல்நாளான நேற்றே லட்சக்கணக்கான மக்கள் போன் வாங்கக் குவிந்ததால், இணையதளம் பிரச்சினைக்கு உள்ளானது.
புகார்கள்...
இந்த இணையத்தளத்தின் நம்பகத்தன்மை குறித்து தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமாக டிராய்க்கும் மத்திய தொலை தொடர்பு அமைச்சகத்துக்கும் புகார்கள் குவிந்து வருகின்றன. இதற்கு முன் இதே நிறுவனம் வெளியிட்ட ஹெட் செட்டை ஆன்லைனில் புக் செய்த பல வாடிக்கையாளர்களுக்கு பொருள் போய் சேரவில்லை என்று கூறப்படுகிறது.
எதிர்ப்பு...
இவ்வளவு குறைந்த விலையில் ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய இயலாது என மொபைல் உற்பத்தியாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களைக் கொண்டு இந்த போன் தயாரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடிதம்...
இந்நிலையில், இந்த போன் விற்பனை ஒரு மிகப்பெரிய ஊழல் என பாஜக எம்.பி. கிரித் சோமைய்யா தெரிவித்துள்ளார். இது குறித்த தனது பல்வேறு சந்தேகங்களை கடிதமாக எழுதி, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு அவர் அனுப்பியுள்ளார்.
சந்தேகம்...
தனது கடிதத்தில் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரின் நிதி நிலைமை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனது இந்தக் கடிதம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார் சோமைய்யா.
ஏமாற்று வேலை...
அதில் அவர்,
- இந்த ஃப்ரீடம் 251 போன் என்பது ஏமாற்று வேலை.
- ரூ. 4000 மதிப்புள்ள ஸ்மார்ட் போனை எப்படி வெறும் ரூ. 251க்கு தர முடியும்?
- கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெறும் சில லட்சங்கள் மதிப்பில் தொடங்கப்பட்ட ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தால் எப்படி இப்படி ஒரு மானிய விலையில் செல்போனை தயாரித்து விற்க முடியும்?
மிகப்பெரிய ஊழல்...
- இந்த நிறுவனத்தின் உரிமையாளர் போதுமான பண பின்புலமோ, இந்தத் துறையில் முன் அனுபவமோ உள்ளவர் அல்ல.
- இந்த குறைந்த விலை போன் தயாரிப்பு குறித்து அந்நிறுவனம் உரிய விளக்கம் ஏதும் தராதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
- ட்ராய் சேர்மேனிடம் இது குறித்து நான் பேசியுள்ளேன். இந்த மிகக்குறைந்த விலை ஆஃபர் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளேன்.
- இது நிச்சயமாக மிகப்பெரிய ஊழல்
2 தொழிற்சாலைகள்...
இது தொடர்பாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத் தலைவர் அசோக் கூறுகையில், ‘இந்த மலிவு விலை செல்போன்களை தயாரிப்பதற்கென்றே நொய்டாவில் ரூ. 250 கோடி செலவில் இரண்டு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன' எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சமூக வலைதளங்களிலும் பலர் இந்த போன் திட்டத்தை "ஓவர் டைம்" பார்த்து ஓட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.