ஏப்ரல் 1க்கு பிறகு செல்லாத பணம் வைத்திருந்தால் தண்டனைக்குரிய குற்றம் - மத்திய அரசு முடிவு
2017ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் தற்போது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அதிரடியாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனையடுத்து மக்கள் தங்களிடமுள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி வருகின்றனர். டிசம்பர் 30ம் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின் மார்ச் இறுதி வரை ரிசர்வ் வங்கிகளில் பணத்தை மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவலைமத்திய அரசு அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி சந்திரகவுடு ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, மத்திய அரசு தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார்.
கடந்த 8ம்தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடைவிதிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பலர் முதல் வகுப்பில் விமான டிக்கட்டுகளை பதிவு செய்துள்ளனர்,அதனையும் கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.
மத்திய அரசு கொண்டுவர உள்ள புதியசட்டத்தால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் கருப்பு பணத்தை வைத்திருப்பது அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். இது அதிக அளவில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது.