பாஜகவில் இணைந்தார் முன்னாள் மும்பை கமிஷ்னர் சத்யபால் சிங்
மும்பை: அரசியலில் பிரவேசித்து நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என ஆவேசமாகத் தனது பதவியை ராஜினாமா செய்த மும்பை கமிஷ்னர் சத்யபால் சிங் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
1980ம் ஆண்டு ஐபிஎஸ் பட்டத்தைப் பெற்றவரான சத்யபால் சிங், மும்பை நகர போலீஸ் கமிஷ்னராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்னர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார் சத்யபால்.
வரும் 2015ம் ஆண்டு அவரது பதவிகாலம் முடிந்து ஓய்வுபெறும் நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்த சத்யபால், ‘நான் அரசியலில் பிரவேசித்து நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறேன். நான் எந்தக் கட்சியில் சேர்வது என்று இதுவரை முடிவு செய்யவில்லை. இன்னும் சில நாட்களில் அது குறித்தான அறிவிப்பு வெளியாகும்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மீரட்டில் நடந்த பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது, சத்யபால் அக்கட்சியில் இணைந்ததாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் அவர் போட்டியிட இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.