டெல்லி: ஆட்சியமைக்க தயார்; மறுதேர்தலையும் சந்திப்போம்- பா.ஜ.க.
டெல்லி: டெல்லியில் ஆட்சியமைக்க தயாராக இருப்பதாக அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் சதீஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார். புதிய தேர்தலை சந்திக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் 49 நாட்கள் முதல்வராக ஆட்சி நடத்தி விட்டு பதவி விலகினார். இதையடுத்து அங்கு கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்போது அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக குதிரை பேரம் நடத்துகிறது என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். அதனை ராஜ்நாத் சிங் மறுத்தார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சதீஷ் உபாத்யாய் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ் உபாத்யாய், டெல்லியில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்களை ராஜ்நாத்சிங்கிடம் விளக்கியதாக தெரிவித்தார்.
கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சதீஷ் உபாத்யாய், டெல்லியில் ஆட்சியமைக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாகவும், ஆனால் ஆட்சியமைப்பதற்கான அழைப்பு எதுவும் துணை நிலை ஆளுநரிடமிருந்து வரவில்லை எனவும் தெரிவித்தார்.
அதேநேரத்தில், டெல்லியில் புதிதாக தேர்தலை சந்திக்கவும் தயாராக இருப்பதாகவும் சதீஷ் உபாத்யாய் கூறினார்.காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை கொண்டு ஆட்சி அமைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு எடுப்போம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications