மத்திய பட்ஜெட்: 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு
டெல்லி: மத்திய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ரூபாய் 38,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கியது. 25ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ. 38,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார்.
கிராமப்புற மக்களுக்கு வேலை அளிக்கும் விதமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம்தான்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு 100 நாள் வேலைத் திட்டம்.
முதலில் கிராமங்களில் குளங் களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மட்டும் செய்து வந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் தற்போது, கட்டிடங்கள் கட்டுதல், வனத்துறையினருடன் இணைந்து செடிகளை நடுதல், வேளாண் துறைக்கான பண்ணை குட்டைகள் வெட்டுதல், கிணறு வெட்டுதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகின்றனர்.
ஒரு குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனித்தனியாக வேலை அட்டை வழங்கப்படுகிறது. ஆனால், அவர்களுக்கான சம்பளம் குடும்ப தலைவரின் வங்கிக்கணக்கிலேயே சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டம் இது என்பது முக்கியமானது.












Click it and Unblock the Notifications