தமிழக காங். தலைவர் பதவி... ராகுல் எதிர்ப்பை மீறி சோனியாவை சந்திக்க வாசன் மும்முரம்!!
டெல்லி: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பாக சோனியாவை சந்திப்பதற்காக டெல்லியில் ஜி.கே.வாசன் முகாமிட்டிருக்கிறார். ஆனால் தம்மை முழுமையாகவே ராகுல் நிராகரிக்கும் நிலையில் சோனியாவை எப்படியாவது சந்தித்தே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாராம் வாசன்.
ராஜ்யசபா எம்.பி.யாக மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன் மீது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு அப்படி ஒரு வெறுப்பு.. தனது எம்.பி. பதவி காலியான போது வேறு மாநிலத்தில் இருந்து தம்மை தேர்ந்தெடுங்கள் என்று கேட்டுப் பார்த்தார் வாசன்..
ஆனால் ராகுலோ, லோக்சபா தேர்தலில் நின்று வெல்லுங்கள் என்று கடுப்படித்தார். இதில் வெறுத்துப் போன ஜி.கே.வாசன் தமது ஆதரவாளர்கள் மூலம் அவ்வப்போது தனிக் கட்சி முழக்கங்களை முன்வைத்து காங்கிரஸ் மேலிடத்தை மிரட்டும் அரசியலை செய்து வருகிறார்.

லோக்சபா தேர்தலில் போட்டியில்லை
பின்னர் லோக்சபா தேர்தலில் தாம் போட்டியிடப் போவதே இல்லை என்று பகிரங்கமாகவும் அறிவித்தார் வாசன். தேர்தலில் காங்கிரஸ் மண்ணை கவ்வியது. அதைத் தொடர்ந்து ஜி.கே.வாசனின் ஆதரவாளரான ஞானதேசிகனை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து தூக்குவதற்கு எதிர்க்கோஷ்டியான ப.சிதம்பரம் அணி மும்முரம் காட்டியது.

தமிழக காங். தலைவர் யார்?
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்பது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய குழு ஆலோசித்து 4 பேர் கொண்ட ஒரு பட்டியலை மேலிடத்தில் கொடுத்துள்ளது.

அந்த 4 பேர் இவர்கள்தான்..
அந்தப் பட்டியலில் வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் ஞானதேசிகன் பதவிக்கு வேட்டு ரெடியாகிவிட்டது என்பதை உறுதி செய்து கொண்டார் ஜி.கே.வாசன்.

டென்சனில் வாசன்
இதனால் தமது ஆதரவாளர் ஞானதேசிகனை மாற்றக் கூடாது அல்லது என்னை தலைவராக்குங்கள் என்ற கோரிக்கையுடன் சோனியாவை சந்திப்பதற்காக டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் ஜி.கே.வாசன்.

4 பேர் மீதும் புகார்
ஜி.கே.வாசனைப் பொறுத்தவரையில் தற்போது தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட 4 பேர் மீது புகார் பட்டியலை கையில் வைத்துக் கொண்டுதான் சோனியாவை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்.

வசந்தகுமார்
அதாவது, வசந்தகுமாரை கட்சித் தலைவராக்கினால் தனது வர்த்தக நிறுவனங்கள் நலன் கருதி தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த மாட்டார்

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸை தலைவராக்கினால் திமுகவுடன் மட்டுமே கூட்டு சேர முயற்சிப்பார்.. இதர கட்சிகள் பற்றி யோசிக்கவே மாட்டார்

சுதர்சன நாச்சியப்பன்
சுதர்சன நாச்சியப்பனுக்கு அகில இந்திய காங்கிரஸில் முக்கிய பதவி வழங்கப்பட்டிருப்பதால் தலைவர் பதவி எதற்கு?

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர் அண்மையில் காங்கிரஸுக்கு வந்தவர்..அவருக்கு பதவி கொடுத்தால் பிரளயம் வெடிக்கும்
இப்படித்தான் சோனியாவிடம் புலம்புவதற்கு தயாராக இருக்கிறாராம் ஜி.கே.வாசன்.

கடுப்பில் ராகுல் காந்தி
ஆனால் ஜி.கே.வாசன் பெயரைக் கேட்டாலே கடுப்பாகிறார் ராகுல் காந்தி. அதனால் சோனியாவை சந்திக்கவே விட கூடாது என்பதில் ராகுல் கண்கொத்திப் பாம்பாக இருக்கிறாராம்.

வெறுப்பில் சோனியா
அதேபோல் தமிழக காங்கிரஸார் எவர் பெயரைக் கேட்டாலுமே அனுமதி இல்லை என்கிறாராம் சோனியா.

போராடும் ஜி.கே.வாசன்
இப்படி ராகுல் எதிர்ப்பை மீறி சோனியாவை சந்தித்து தலைவர் பதவி குறித்து எப்படியும் பேசிவிடுவேன் என்று நம்பிக்கையோடு டெல்லியில் காத்துக் கிடக்கிறாராம் ஜி.கே.வாசன்












Click it and Unblock the Notifications