லலித் மோடி விவகாரத்தில் சிக்கிய வசுந்தரா ராஜேவுக்கு பா.ஜ.க. முழு ஆதரவு- நிதின் கட்காரி
ஜெய்பூர்: தேடப்படும் குற்றவாளி லலித் மோடிக்கு உதவியதாக சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜேவுக்கு மத்திய அரசும் பாரதிய ஜனதாவும் முழு ஆதரவு அளிக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரராஜே உதவிய விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இருவரும் பதவி விலக வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளன. இதனால் மத்திய அரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ததாகக் கூறும் சுஷ்மா ஸ்வராஜுக்கு, மத்திய அரசு தனது ஆதரவை தெரிவித்தது. ஆனால் வசுந்தரராஜேவை பாரதிய ஜனதாவும் மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருந்தது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷாவுடனான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதை அவர் புறக்கணித்தார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் வசுந்தரராஜே சிந்தியாவை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு பாரதிய ஜனதா மற்றும் மத்திய அரசு முழுஆதரவு அளிக்கிறது. வசுந்தரா ராஜேவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை... அவரிடம் எந்தஒரு வகையிலும் தவறு இல்லை.... இதுபோன்ற அரசியல் நடத்துவது சரியானது கிடையாது என்றார்.












Click it and Unblock the Notifications