30 நிமிடங்களில் நடந்த மேஜிக்.. சாதித்துக்காட்டிய இஸ்ரோ! விண்ணில் பறந்தது ககன்யான் சோதனை கலன்
ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் சோதனை கலனை கொண்டு செல்லும் ராக்கெட் விண்ணில் பாய வெறும் 5 விநாடிகள் இருந்த நிலையில், கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டு சோதனை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த 3 நிமிடங்களில் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு ககன்யான் கலன் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியினர் ஏராளமானோர் விண்வெளிக்கு சென்றிருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து ஒருவரை, அதுவும் இஸ்ரோவின் ராக்கெட்டுகள் மூலமாக இதுவரை நாம் விண்வெளிக்கு அனுப்பியதில்லை. எனவே சொந்த முயற்சியில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது என இஸ்ரோ தீர்மானித்து, அதற்கு 'ககன்யான்' என திட்டம் வகுத்து, அதை சாத்தியப்படுத்துவதில் தீவிரமாக இறங்கியது. ககன்யான் திட்டம் வெற்றியடைந்தால் ரஷ்யா சார்பில் அமைக்கப்பட உள்ள விண்வெளி மையத்தில் நாமும் வாய்ப்பு கேட்கலாம் என்கிற யோசனையும் இருக்கிறது.

எனவே ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தின் முதல்கட்ட சோதனை இன்று நடைபெற இருந்தது. அதாவது, மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் ராக்கெட்டிலிருந்து மனிதர்கள் இருக்கும் கலனை பூமியில் பத்திரமாக தரையிறங்க வைக்கும் மிஷன் இன்று பரிசோதனை செய்து பார்க்க இருந்தது இஸ்ரோ. இதற்காக தனியாக ஒரு ராக்கெட் வடிவமைக்கப்பட்டது. இந்த ராக்கெட்டின் உச்சியில் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் மாதிரி கலன் (Crew Module) இருக்கும்.
இந்த கலனை ஏந்திக்கொண்டு ராக்கெட் 17 கி.மீ உயரத்திற்கு ஒலியை விட 1.5 மடங்கு வேகத்தில் பறக்கும். அங்கிருந்து மாதிரி கலன் மட்டும் தனியாக பிரிந்து வங்கக்கடலை நோக்கி வரும். கடலுக்கும் கலனுக்கும் சுமார் 2 கி.மீ தொலைவு இருக்கும் போது கலனில் உள்ள பாராசூட் விரிந்து கலனின் வேகத்தை குறைக்கும். இவ்வாறு வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் பாதுகாப்பாக இந்த கலன் தரையிறங்கும். அங்கு கடற்படையினர் இந்த கலனை மீட்டு கரைக்கு கொண்டு வருவார்கள். இதுதான் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனையாகும்.
இதற்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு ராக்கெட் ஏவப்பட இருந்தது. ஆனால் சாதகமான வானிலை இல்லாததால் 8 மணிக்கு ஏவப்பட வேண்டிய ராக்கெட் 8.30க்கு ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரும் ஏவப்படாமல், 8.45லிருந்து 9 மணிக்குள் ஏவப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் கடைசி 5 விநாடிகளில் ராக்கெட் ஏவுதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து இஸ்ரோ முன்னாள் இணை இயக்குநர் வெங்கட்ராமன் கூறுகையில்,
"TV-D1 ராக்கெட் மூலம் மாதிரி கலன் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்கையில் வானிலையில் சில குறுக்கீடுகள் ஏற்பட்டன. அதேபோல இந்த ராக்கெட்டின் என்ஜின் T-5 என்கிற கடை 90% அளவு உந்து சக்தியை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அது கொடுக்கவில்லை என்று நேரலை வீடியோவை பார்க்கும்போது தெரிய வருகிறது. இப்படி கிடைக்கவில்லையெனில் ராக்கெட் கீழே விழுந்துவிடும். இந்த விபத்தை தடுக்க தன்னிச்சையாக ராக்கெட் ஆஃப் ஆகிவிடும். இது ஜிஎஸ்எல்வியில் இருக்கும் ஒரு சிறப்பம்சம். இந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட்டிலிருந்துதான் TV-D1 மேம்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே போதுமான உந்து சக்தி கிடைக்காததால்தால் கூட லாஞ்ச் ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் வெறும் 30 நிமிடங்களில் தொழில்நுட்ப பிரச்னைகள் சரி செய்யப்பட்டு தற்போது மாதிரி கலனை (Crew Module) ஏந்திக்கொண்டு TV-D1 ராக்கெட் விண்ணில் பறந்திருக்கிறது. விண்ணில் பறந்த ராக்கெட்டிலிருந்து மாதிரி கலன் தனியாக பிரிந்து பாராசூட் உதவியுடன் வங்கக்கடலை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரத்தை பொறுத்த அளவில் இந்த சோதனை திட்டம் வெற்றியடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications