லோக்சபா தேர்தல்: ஆம் ஆத்மி சார்பில் மேதா பட்கர் போட்டி- ராகுலை எதிர்த்து விஷ்வாஸ்
டெல்லி: லோக்சபா தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி முதல் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
டெல்லி முதல்வராக இருந்த ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் ஜன்லோக்பால் மசோதா விவகாரம் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்தாலும் அவர் லோக்சபா தேர்தல் வேலைகளில் தீவிரமாக உள்ளார்.
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கவிஞர் குமார் விஷ்வாஸ் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து அமேதியிலும், சட்ட அமைச்சர் கபில் சிபலை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் சாந்தினி சவுக் பகுதியிலும், அஞ்சலி தமானியா பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரியை எதிர்த்து நாக்பூரிலும், முன்னாள் வங்கி ஊழியரான மீரா சான்யால் மிலிந்த் தியோராவை எதிர்த்து தென் மும்பையிலும் போட்டியிடுகிறார்கள்.
மேலும் சமூக சேவகி மேதா பட்கர், யோகேந்திர யாதவ் மற்றும் முகுல் திரிபாதி ஆகியோரின் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளது.