முதல்ல தடுப்பூசி வேணுமா...ரூ.500 கொடுங்க...ம.பி.யில் செல்போனில் பேசும் மோசடி கும்பல்.. மக்களே உஷார்!
போபால்: மத்திய பிரதேசத்தில் மக்களிடம் செல்போனில் பேசும் மோசடி கும்பல் ஓன்று முதல்ல கொரோனா தடுப்பூசி போட வேண்டுமானால், ரூ.500 கொடுங்க எனக்கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது போன்ற கும்பல்களிடம் வங்கி விவரங்கள், ஆதார் விவரங்களை அளிக்க வேண்டாம் என மத்திய பிரதேச சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களிடம் எச்சரித்து உள்ளனர்.

ஒரு ஆண்டுக்கு மேலாக ஆடி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவற்றில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. மருத்துவ முன்கள பணியாளர்கள், வயதானவர்கள், அவரச அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசி போடுவதற்காக கணக்கு எடுக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி முதலில் போட வேண்டுமானால் ரூ.500 செலுத்துங்கள் என்று ஒரு மோசடி கும்பல் மத்திய பிரதேச மாநிலத்தில் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சஹ்யாத்ரி பாரிசர் அருகே குடும்பத்துடன் வசித்து வருபவர் மோனிகா துபே. அவரது உறவினரின் செல்போனுக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், உங்க குடும்பத்துக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டுமா? அதுக்கு நீங்க முன்னரே பதிவு செய்யணும். இந்த வங்கி கணக்குக்கு ரூ.500 செலுத்துங்க என அந்த நபர் பேசினார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதேபோல் போபாலைச் சேர்ந்த ஒரு மாணவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். 'மத்திய அரசு ஒப்புதல் அளித்த கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு உங்கள் பெயரை முதலாவதாக பதிவு செய்ய வேண்டுமானால், உங்கள் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் விவரங்களை கொடுங்கள் என்று ஒரு தெரியாத நபர் தன்னிடம் செல்போனில் பேசியதாக அந்த மாணவர் தெரிவித்தார். இதேபோல் பல்வேறு போலி தொலைபேசி அழைப்புகள் மாநிலம் முழுவதும் வருவது குறித்து போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த போலியான நபர்களிடம் கவனமாக இருக்கும்படி மத்திய பிரதேச சைபர் கிரைம் போலீசார் மக்களை எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக மாநில சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'கொரோனா தடுப்பூசி முதலில் போடுவதற்காக, அதற்காக பதிவு செய்வதற்காக பணம் செலுத்தும்படி மக்களிடம் செல்போன் மூலம் சிலர் பேசுவதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. எனவே பொதுமக்கள் இவ்வாறு அழைப்பில் வரும் நபர்களிடம் எந்தவொரு OTP அல்லது பிற வங்கி விவரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
சந்தேகபடக்கூடிய கொரோனா வைரஸ் தடுப்பூசி அளிக்கும் எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். ஆன்லைன் மோசடி செய்பவர்கள் ஃபிஷிங் மெயில்கள் மற்றும் இணைப்புகளை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக அனுப்புகின்றனர். அதை கிளிக் செய்ய வேண்டாம். கவனம் கொள்ள வேண்டும்' தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications