பாலுக்காக அழுத 18 மாத குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற கொடூர தந்தை
லக்னோ: பாலுக்காக அழுத குழந்தையை கழுத்தை வெட்டி கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
நெஞ்சத்தை பிசையும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் ஜகாங்கீர்பாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படர்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தோஷின் (32). இவரது 18 மாத பெண் குழந்தை சோயா. சம்பவத்தன்று, மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தை பசியால் பால் கேட்டு அழுதுள்ளது.
தோஷின் சமாதானப்படுத்தியும் கேட்காமல் தொடர்ந்து அழுததால் ஆத்திரமடைந்த அவர், சோயாவின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார். இனிமேல் குழந்தை அழாது என்று திருப்திப்பட்டுக்கொண்ட தோஷின், கொலையை மறைப்பதற்காக மகளின் சடலத்தை ஊர் குளத்தில் கொண்டு போட்டுள்ளார்.
இதை பார்த்த உள்ளூர் மக்கள், சிலர் தோஷினை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுமியின் மாமா மேக்ருதீன் முறைப்படி புகார் அளித்ததன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீசார் கொடூர தந்தை தோஷினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.